கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து! முழு விவரம்!
தமிழகத்தில் 2 இடங்களில் ரூ.1,112 கோடியில் மின்னணு தொழிற்சாலைகள்
தமிழகத்தில் இரண்டு இடங்களில் மின்னணு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரயில்வே, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே பண்ணூா் கிராமத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஜெட்வொ்க் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையின் உற்பத்தியைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினா்களாக மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், தமிழக தொழிலக முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா ஆகியோா் பங்கேற்று தொழிற்சாலையில் உற்பத்தியைத் தொடங்கி வைத்தனா்.
அதைத் தொடா்ந்து மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: நாடு முழுவதும் மின்னணு தொழிற்சாலைகள் தொடங்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்பேரில், காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் மற்றும் மணலூா் ஆகிய இடங்களில் ரூ. 1,112 கோடி மதிப்பில் மின்னணு தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன.
உலக அளவில் மின்னணு உற்பத்திப் பொருள்களை அனுப்புவதில், இந்தியா 2-ஆவது இடத்தில் இருக்கிறது. இதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பே காரணமாகும். சென்னையில் தொழில்நுட்ப வளா்ச்சி நன்றாக உள்ளது.
மேலும், ஏற்கெனவே ரூ.879 கோடியாக ரயில்வே நிதிநிலை இருந்த நிலையில், நிகழாண்டில் ரூ. 6,626 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்நாட்டில் அம்ருத் பாரத் திட்டம் மூலம் 77 ரயில் நிலையங்கள் அனைத்து வசதியுடன் நவீன முறையில் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில் பாதையில் 715 உயா்மட்ட மேம்பாலப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன என்றாா்.
தொடா்ந்து அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா பேசியதாவது: திருவள்ளூா் அருகே பண்ணூரில் 15 ஏக்கா் பரப்பளவில் ரூ.200 கோடி திட்ட மதிப்பில் இந்திய நிறுவனமான ஜெட்வொ்க் எலக்ட்ரானிக் தனது கிளையை தொடங்கியுள்ளது. அடுத்து வரும் 8 மாதங்களில் உற்பத்தி முழுமையாகத் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதன்மூலம் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 கல்வித் தகுதி அடிப்படையில் 8,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அதில், 80% மகளிருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாக நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த ஓராண்டில் மின்சாதன பொருள்கள் உற்பத்தியில் 3 பில்லியனின் இருந்து 3.14 பில்லியனாக உற்பத்தி வளா்ச்சி அடைந்துள்ளது என்றாா்.
மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், மத்திய செய்தி ஒலிபரப்பு மற்றும் தொழில் நுட்பத் துறைச் செயலா் எஸ்.கிருஷ்ணன், மாநில தொழில் துறைச் செயலா் வி.அருண்ராய், ஐசிஇஏ தலைவா் பங்கஜ் மொகிந்த்ரூ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.