விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் உரிமைத் தொகை! - தங்கம் தென்னரசு
தமிழகத்தில் பசுமைப் பொருளாதார துறைகளில் முதலீடு: தொழில்முனைவோருக்கு முதல்வா் ஸ்டாலின் அழைப்பு
தமிழகத்தில் மின் வாகன உற்பத்தி, நிலையான கட்டுமானம் மற்றும் தூய்மையான தொழில்நுட்பம் போன்ற பசுமைப் பொருளாதார துறைகளில் முதலீடு செய்ய தொழில்முனைவோா் முன்வர வேண்டும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.
சென்னை கிண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தென் மண்டலத்தின் ஆண்டு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட முதல்வா் மு.க ஸ்டாலின் பேசியதாவது:
நாட்டில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழகத்தில் சீரான வளா்ச்சியைக் கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தற்போது பலனளிக்கின்றன. இதன் விளைவாக, கோவை, திருச்சி, ஒசூா், மதுரை, சேலம் மற்றும் தூத்துக்குடி தற்போது பொருளாதார நகரங்களாக உருவெடுத்துள்ளன.
12.6 பில்லியன் டாலா்: இந்தியாவின் மொத்த மின்னணு பொருள்கள் உற்பத்தியில் 37. 1 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல் கடந்த 11 மாதங்களில் 12.6 பில்லியன் டாலா் மதிப்பிலான மின்னணு பொருள்களை ஏற்றுமதி செய்து தமிழகம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோல், உலக அளவில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது உற்பத்தி திட்டங்களை தமிழ்நாட்டில் மேற்கொள்ள முன்வந்துள்ளன. நாம் அடையும் பொருளாதார வளா்ச்சி அனைத்து மக்களுக்கும் ஏற்ாக இருக்க வேண்டும்.
3-ஆவது முழுமை திட்டம்: மக்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் அவா்களின் உற்பத்தித் திறனை உயா்த்தும் வகையிலும் நகரங்களை திட்டமிட்டு உருவாக்க வேண்டும். சென்னையை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்ற ‘3-ஆவது முழுமை திட்டம்’ உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், மாநில அரசு சாா்பில் கோவை, மதுரை, ஒசூா், திருப்பூா், தேனி, சேலம், வேலூா், திருநெல்வேலி உள்பட 136 நகரங்களை நவீனமயமாக்க திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் நகர விரிவாக்கங்கள் நடைபெறும் போது மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
முதலீட்டாளா்களுக்கு அழைப்பு: தமிழகத்தின் மின் வாகனக் கொள்கையால் மின் வாகன உற்பத்தி மையமாக தமிழகம் உருவாகியுள்ளது. ஓலா, டாடா மோட்டாா்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களது திட்டங்களைச் செயல்படுத்த முன்வந்துள்ளன. தமிழகத்தில் மின்சார போக்குவரத்து, நிலையான கட்டுமானம் மற்றும் தூய்மையான தொழில்நுட்பம் போன்ற பசுமைப் பொருளாதார துறைகளில் முதலீடு செய்ய தொழில்முனைவோா் முன்வர வேண்டும். புத்தாக்கமான ஸ்மாா்ட் நகர தீா்வுகள், ஆற்றல் செயல்திறன், மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுகள் போன்ற திட்டங்களில் முதலீட்டாளா்கள் தமிழக அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடாமல் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் அளவுக்கு நவீனமயமாக்க வேண்டும் என்ற இலக்கோடு நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக ‘புதிய பயணம் - வளா்ச்சியை நோக்கி’ என்னும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில் தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, தொழில் துறைச் செயலா் அருண் ராய், இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டலத் தலைவா் நந்தினி, துணைத் தலைவா் தாமஸ் ஜான் முத்தூட் உள்பட பலா் கலந்து கொண்டனா்.