செய்திகள் :

மேஜிக் பெண்கள் 2.O: பெண் தொழில்முனைவோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி - பிரபலங்களின் அனுபவப் பகிர்வு

post image

மேஜிக் தமிழ் நிறுவனத்தின் சார்பில் மேஜிக் பெண்கள் 2.O எனும் பெண் தொழில்முனைவோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷனில் நடைபெற்றது.

இதில் பெண் தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் கலந்துகொண்டனர். "தொழில்முனைவோர் என்பவருக்கு எந்த பாலினமும் கிடையாது. பிறரின் பாராட்டையும் மதிப்பீடுகளையும் எதிர்பார்க்காமல் உண்மையாக இருங்கள்" என்ற அறிவுரையோடு இந்நிகழ்வைத் தொடக்கி வைத்தார் நேச்சுரல் நிறுவனத்தின் இணை நிறுவனர் சி. கே. குமரவேல்.

நேச்சுரல் நிறுவனத்தின் இணை நிறுவனர் சி. கே. குமரவேல்.
நேச்சுரல் நிறுவனத்தின் இணை நிறுவனர் சி. கே. குமரவேல்.

அடுத்ததாக பேசிய தொழில்முனைவோரும் மனநலப் பயிற்சியாளருமான மாலிகா ரவிக்குமார் "பெண்கள் தங்களது உணர்ச்சிகளுக்கான ரிமோட்டை பிறரிடம் கொடுத்துவிடுகிறார்கள். யாரிடம் ரிமோட் இருக்கிறதோ அவர்களும் எதை செய்தால் பெண்கள் உடைந்து போவார்களோ அதையே செய்வார்கள். எனவே, அந்த ரிமோட்டை திரும்பி வாங்கிவிடுங்கள்" என்று கலகலப்பாக பேசி சில ஆலோசனைகளை வழங்கினார்.

ஸ்ரீராம் கேப்பிடலின் நிர்வாக இயக்குநர் சுபஸ்ரீ ஸ்ரீராம், "நான் பல நிறுவனங்களை நிர்வகித்து வருகிறேன். ஆனால் சமமான நேரத்தை எல்லா நிறுவனத்துக்கும் செலவிட முடியாது. எதற்கு தேவை உள்ளதோ, எது அதிக முதலீடுகளை ஈர்க்கிறதோ அதற்கு தான் அதிக நேரம் ஒதுக்குவேன். நீங்கள் ஒரு தொழில்முனைவோராக ஆகிவிட்டால் அலுவலகத்தில் செலவிடும் நேரம் மட்டுமல்ல.

வேலையைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பதும் வேலையில்தான் வரும்" என நேர மேலாண்மை பற்றி பேசியவர், "நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சரியான நபரைத் தேர்ந்தெடுங்கள், உங்களுடைய தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள், முடிவை மாற்றிக்கொள்ள வெட்கப்பட்டு அதை மூடி மறைக்காதீர்கள். இவற்றின் மூலம் உங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்துவிடலாம்" என்றார்.

ஸ்ரீராம் கேப்பிடலின் நிர்வாக இயக்குநர் சுபஸ்ரீ ஸ்ரீராம்
ஸ்ரீராம் கேப்பிடலின் நிர்வாக இயக்குநர் சுபஸ்ரீ ஸ்ரீராம்

இறுதி நிகழ்வாக பெண் தொழில்முனைவோர் மற்றும் சாதனையாளர்கள் என்ற தலைப்பில் குழு விவாதத்தை தலைமையோற்று நடத்தினார் ப்ளிங் ஸ்மார்ட் ஹோம்ஸின் நிறுவனர் ஐஸ்வர்யா செந்தில்நாதன். அதில் பேசிய தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினர் சுதா ராமன், "நிதி ஆயோக்கின் மாநில அளவிலான குழுதான் திட்டக்குழு.

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், நாங்கள் அரசுடன் பணியாற்றுகிறோம், அரசுக்காக பணியாற்றுகிறோம். ஆனால் அரசுக்கு வெளியிலிருந்து பணியாற்றுகிறோம். நான் மேல் படிப்புக்காக ஜிப்மர் நுழைவு தேர்வுக்குத் தயாரானேன். தேர்வு எழுதும்போது நான் முழு மாத கர்ப்பிணியாக இருந்தேன். தேர்வு அறையில் இருக்கும் டேபிளில் சரியாக உட்கார்ந்துகூட தேர்வு எழுத முடியவில்லை.

ஆனால் தேர்வில் தேர்ச்சியடையவும் இல்லை. என்ன தவறு செய்தேன் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது என் கணவர் என்னிடம் வந்து, 'ஒரு வருடம் எடுத்துக்கொண்டு, என்ன தேர்வு வேண்டுமானாலும் எழுது. அதுவரை குடும்பத்தையும் குழந்தையையும் நான் பார்த்துக்கொள்கிறேன்' என்றார். அப்போதிலிருந்து க்ரூப் 4 உள்ளிட்ட எல்லா தேர்வுகளுக்கும் ராத்திரி பகலாக வெறித்தனமாக படித்தேன்.

முதல் முயற்சியிலேயே ஐஎஃப்எஸ் தேர்வில் வெற்றிபெற்றேன். இது எல்லாவற்றுக்கும் எனக்கு உறுதுணையாக இருந்தது எனது கணவர்தான் " தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துகொண்ட சுதா ராமன், "திட்டக்குழு உறுப்பினாகி பல திட்டங்கள் செயல்படுத்தியிருந்தாலும் என் மனதுக்கு நெருக்கமான திட்டம் என்றால் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்தான்.

நீலிமா ராணி
நீலிமா ராணி

சமீபத்தில் நாங்கள் நடத்திய ஆய்வில் மாணவர்கள் நிறைய பேர் அந்த உணவை விரும்பி சாப்பிடுகின்றனர் என்பது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. இந்தத் திட்டத்தால் நிறைய நல்ல விஷயங்கள் நடந்துள்ளது" என்று கூறினார். "தொழில் தொடங்க இருக்கும் பெண்கள்‌ முதலில் உங்கள் குடும்பத்தினருக்கு உங்கள் மேல் நம்பிக்கை வர வையுங்கள்.

பின்பு அவர்களே உங்களை உற்சாகப்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்" என்றார் நடிகையும் தொழில்முனைவோருமான நீலிமா ராணி. நிகழ்ச்சியில் தமிழ் செய்தித் தொலைகாட்சியின் முதல் பெண் ஆசிரியரான சுகிதா சாரங்க ராஜ், உலக கேரம் போட்டியில் இந்தியாவுக்காக மூன்று தங்க பதக்கங்களை பெற்ற காசிமா, ரேடியோ ஜாக்கியும் தொகுப்பாளருமான டோஷிலா உமாசங்கர் ஆகியோருக்கு சாதனை பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.