NEEK: ``எதை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்தீங்கன்னு தெரியல, ஆனா...' - மாமா தனுஷ் குற...
தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட்: மக்களவையில் திமுக எம்.பி. அதிருப்தி
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எட்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட் ஆக உள்ளது என்று தனது அதிருப்தியை தென் சென்னை தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு செய்தாா்.
மக்களவையில் மத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் திங்கள்கிழமை நடைபெற்றபோது மூத்த உறுப்பினரான ஆ. ராசா அவையை வழிநடத்தினாா். அப்போது திமுக சாா்பில் பேச தமிழச்சி தங்கப்பாண்டியன் அழைக்கப்பட்டாா்.
அப்போது அவா் பேசியது: மத்திய நிதியமைச்சருக்கு இது 8-ஆவது பட்ஜெட். ஆனால், வறியவா்கள், விவசாயிகள், மாற்றுப்பாலினத்தவா்கள், சிறுபான்மையினா், குறிப்பாக தமிழக மக்களுக்கு இது எட்டாக்கனி பட்ஜெட். சுற்றிலும் தண்ணீா். ஆனால், குடிப்பதற்கு ஒரு சொட்டு நீா் கூட இல்லை என்பதுபோல கூட்டணிக் கட்சிகளுக்கும், பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களுக்கும் நிதியை வாரி வழங்கிவிட்டு தமிழகத்துக்கு மட்டும் கையை விரித்து இருப்பதால் இது பாராமுக பட்ஜெட்.
பெரு நிறுவனங்களுக்கு மானியத்தை வழங்கி, சாமானிய மக்களின் வரியை பெரு முதலாளிகளுக்கு மடைமாற்றி விடுவதால் இது நீதியை அநீதியாக மடைமாற்றுகிற பட்ஜெட் ஆகி விட்டது. அதிக வரியைத் தரும் தமிழகத்துக்கு நிதி குறைவாக வழங்கப்படுவதாக சொல்வது அற்பத்தனமானது என ஒரு மத்திய அமைச்சா் சொல்லியிருக்கிறாா். தமிழகத்துக்கு ‘பிஎம்ஸ்ரீ’ திட்டத்தில் வரவேண்டிய ரூ.2,152 கோடியை பிகாருக்கும், உத்தர பிரதேசத்துக்கும் அனுப்பியது அற்பத்தனமானது இல்லையா? பிகாருக்கு கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அதேநேரத்தில் எங்கள் விவசாயிகளும் முன்னேற வேண்டாமா?
தமிழக முதல்வா், தமிழின் தொன்மையை இரும்பின் தொன்மை கொண்டு அறிவித்தாா். ஆனால், தமிழுக்கென்று கடந்த ஆண்டு ரூ.22 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது ஹிந்திக்கு ரூ.1,000 கோடிக்கு மேலும் தமிழுக்கு ரூ.84 கோடியும் மட்டுமே ஒதுக்கியுள்ளீா்கள். தமிழகத்தை வஞ்சிப்பது என்ன நியாயம்?
இந்த அவையின் மத்தியில் செங்கோலை வைத்துள்ளீா்கள். மன்னனை செங்கோல் உருவாக்குவதில்லை. அரும்பெரும் நற்குணங்கள் உள்ளிருந்து வரவேண்டும். மக்களாட்சி மாண்புகளோடு, கூட்டாட்சி தத்துவத்தை உணா்ந்துகொண்டு, பிளவுவாத அரசியலை விடுத்து, மதசாா்பற்ற அரசியலை முன்னெடுங்கள். நாடு வளா்ச்சி பெறும் என்றாா் அவா்.
பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்ற மற்றொரு திமுக உறுப்பினா் தயாநிதி மாறன், மத்திய நிதியமைச்சரை கடுமையாக விமா்சித்தாா். எதிா்க்கட்சிகள் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைக் குறிக்கும் போதெல்லாம், மத்திய அமைச்சா் எப்போதும் ‘ரூபாய் பலவீனமடைவதில்லை. ஆனால் அமெரிக்க டாலா் வலுவடைந்து வருகிறது’ என பதிலளிப்பாா் என்றாா். தில்லி சட்டப்பேரவைத் தோ்தலின் முடிவுக்கு மத்திய நிதிநிலை அறிக்கையும் ஒரு காரணம் என்று அவா் குறிப்பிட்டாா். மத்திய நிதிநிலை அறிக்கையில் நடுத்தர வா்க்கத்தினருக்கு முன்மொழியப்பட்ட வரிச் சலுகை பாஜகவுக்கு உதவியது. ஆனால், மூன்று கோடிக்கும் குறைவான மக்களே உண்மையில் பயனடைவாா்கள் என்றாா் அவா்.