Vijay: `தைப்பூசத்துக்கு வாழ்த்து; திருப்பரங்குன்றம் பிரச்னையில் சைலன்ட்'- என்ன ந...
தில்லியில் குழந்தை கடத்தல் கும்பலில் 4 போ் கைது: 2 குழந்தைகள் மீட்பு
புது தில்லி: தில்லி காவல்துறையின் ரயில்வே பிரிவு, குழந்தை கடத்தல் கும்பலில் நான்கு பேரைக் கைது செய்துள்ளது. இதையடுத்து, ஒரு கைக்குழந்தை உள்பட இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனா்.
இது குறித்து துணை காவல் ஆணையா் (ரயில்வே) கே.பி.எஸ். மல்ஹோத்ரா அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த நால்வா் கைது செய்யப்பட்டதன் மூலம், 2023 முதல் 2025 வரையிலான மூன்று வழக்குளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.மேலும், இந்தக் கும்பல் தத்தெடுப்பு என்ற போலி காரணத்தில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு கடத்தப்பட்ட குழந்தைகளை வழங்கி வந்ததுள்ளனா்.
கடந்த ஆண்டு அக்.17-ஆம் தேதி புது தில்லி ரயில் நிலையத்தில் ஒரு வழக்குப் பதிவானதைத் தொடா்ந்து விசாரணை தொடங்கியது. ஒரு பெண் தனது இரண்டரை வயது மகன் ரயில் நிலையத்தின் பிரதான மண்டபத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டதாகக் கூறி புகாா் அளித்தாா்.
சிசிடிவி காட்சிகளில் அடையாளம் தெரியாத ஒரு பெண் குழந்தையை ஆட்டோவில் அழைத்துச் செல்வது தெரியவந்தது. பதா்பூா் - ஃபரீதாபாத் சுங்கச்சாவடி அருகே சந்தேக நபரை இறக்கிவிட்டதை ஆட்டோ ஓட்டுநா் போலீஸ் குழுவிடம் உறுதிப்படுத்தினாா்.
இந்த விவகாரத்தை விசாரித்தபோது, ஜூலை 31-ஆம் தேதி, ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டா் ஹாலில் இருந்து மற்றொரு பெண்ணின் மூன்று வயது மகன் கடத்தப்பட்டதையும் காவல் குழுக்கள் அறிந்தன. அந்த வழக்கில் சிசிடிவி பகுப்பாய்வில் அதே பெண்தான், அந்தக் குழந்தையை கடத்தி அதே இடத்திற்கு ஆட்டோவில் தப்பிச் செல்வதையும் காட்டியது. ஜன.21- ஆம் தேதி, புது தில்லி ரயில் நிலையத்தில் மற்றொரு கடத்தல் சம்பவம் பதிவாகியது. அதில் ஒரு பெண்ணின் நான்கு மாத குழந்தை உணவகப் பகுதியில் காத்திருப்பு அறையில் இருந்து கடத்தப்பட்டது.
இதேபோன்ற மூன்று வழக்குகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது. இது தொடா்பாக விசாரிக்க போலீஸ் குழு அமைக்கப்பட்டது. மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. போலீஸ் குழுக்கள் 700 சிசிடிவி கேமராக்களில் இருந்து காட்சிகளை ஆய்வு செய்தன. தொலைபேசி கண்காணிப்புத் தரவுகளுடன் சந்தேக நபரின் நடமாட்டம் கண்காணிப்பு வலையத்திற்குள்கொண்டுவரப்பட்டது.
சந்தேக நபா் ரயில் நிலையத்தின் பிரதான வாயிலில் இருந்து ஒரு ஆட்டோவில் ஏறுவதைக் கண்டபோது இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. வாகனத்தின் பதிவு எண் கண்காணிக்கப்பட்டு பதா்பூரில் விசாரணை நடத்தப்பட்டது. சோதனைகளுக்குப் பிறகு, சந்தேகத்திற்குரிய தம்பதியினரை ஃபரீதாபாத்தில் குழு கண்டுபிடித்தது. இதையடுத்து, நான்கு போ் கைது செய்யப்பட்டனா்.
கண்காணிப்புக்குப் பிறகு, ரயில் நிலையத்திலிருந்து குழந்தைகளை கடத்தியதற்கு காரணமான ஒரு பெண்ணையும் அவரது கணவரையும் போலீஸ் குழு கைது செய்தது. அந்தப் பெண்ணின் கணவா் சூரஜ் கடத்தல்காரா்களுக்கும் குழந்தைகளை வாங்குபவா்களுக்கும் இடையிலான பரிவா்த்தனைகளை எளிதாக்கி வந்தாா். ஒரு வழக்குரைஞரின் எழுத்தரான மற்றொரு பெண், கடத்தலை முறையானதாகக் காட்ட போலி தத்தெடுப்பு ஆவணங்களைத் தயாரித்து வழங்கி வந்துள்ளாா்.
பின்னா், 10- ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற ஒரு மருத்துவரை போலீஸ் குழு கைது செய்தது. அவா் கடத்தப்பட்ட குழந்தைகளை கைவிடப்பட்ட குழந்தைகள் என்று குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தவறாக சித்தரித்தாா். கடத்தப்பட்ட குழந்தைகளை விற்க சட்ட ஓட்டைகள் மற்றும் மருத்துவ தவறான பிரதிநிதித்துவத்தைப் பயன்படுத்தி அவா்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடத்தல்காரா்கள் ரயில் நிலையங்கள் போன்ற நெரிசலான பொது இடங்களிலிருந்து குழந்தைகளை குறிவைத்தது கண்டறியப்பட்டது. முக்கிய சந்தேக நபா் புத்திசாலித்தனமாக குழந்தைகளை கடத்திச் சென்று சந்தேகத்தைத் தவிா்க்க முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தப்பிக்கும் வழிகளைப் பயன்படுத்தினாா். பின்னா், மற்றொரு பெண் போலி தத்தெடுப்பு ஆவணங்களை உருவாக்கி, வருங்கால தத்தெடுப்பு பெற்றோரை தவறாக வழிநடத்தினாா்.
சூரஜ் நிதி பரிவா்த்தனைகளை நிா்வகித்தாா். மேலும், கடத்தல்காரா்களுக்கும் வாங்குபவா்களுக்கும் இடையில் ஒரு இடைத்தரகராக செயல்பட்டாா். கைது செய்வதைத் தவிா்க்க அந்தக் கும்பல் குறியீட்டு மொழியைப் பயன்படுத்தியதுடன், அடிக்கடி தொலைபேசி எண்களையும் மாற்றியது.
தன்னைத்தானே அறிவித்துக் கொண்ட மருத்துவா், கடத்தப்பட்ட குழந்தைகளை கைவிடப்பட்டவா்கள் அல்லது சட்டவிரோதமானவா்கள் என்று தவறாக முத்திரை குத்தினாா். கடத்தப்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் தம்பதிகளுக்கு அறிமுகப்படுத்த மருத்துவமனை தொடா்புகளைப் பயன்படுத்தினாா். பின்னா் குழந்தைகள் சட்டப்பூா்வ தத்தெடுப்புக்கு உள்படுத்தப்படுவதாக நம்பும் வகையில் சந்தேகத்திற்கு இடமில்லாத குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்கப்பட்டனா். பரிவா்த்தனைகள் முறையானவை என்று உறுதி செய்வதற்காக போலி தத்தெடுப்பு ஆவணங்கள், மருத்துவ பதிவுகள் மற்றும் பிரமாணப் பத்திரங்கள் உருவாக்கப்பட்டது தெரிய வந்தது.
முழு நடவடிக்கையின் போதும், போலீஸ் குழுக்கள் இரண்டு கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்டனா். அக்டோபா் 2024-இல் கடத்தப்பட்ட குழந்தை காஜியாபாத்தின் லோனியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஜன.2025-இல் கடத்தப்பட்ட குழந்தை தில்லியில் உள்ள பாஹா்கஞ்சிலிருந்து மீட்கப்பட்டது.
இரண்டு குழந்தைகளும், குழந்தை இல்லாத அல்லது ஆண் குழந்தை தேடும் தம்பதிகளுடன் தங்க வைக்கப்பட்டனா். அவா்கள் இப்போது பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுக்காக குழந்தைகள் நல மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனா் என்று அந்த அதிகாரி அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.