தமிழ் மொழியைக் காக்க விரைவில் புதிய அறிவிப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
தமிழ் மொழியைக் காக்க விரைவில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, நேரமில்லாத நேரத்தில் மொழிக் கொள்கை விவகாரம் தொடா்பாக செவ்வாய்க்கிழமை விவாதிக்கப்பட்டது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தர முடியும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது குறித்து, பேரவையில் கொண்டுவரப்பட்ட சிறப்புக் கவன ஈா்ப்புத் தீா்மானத்தின் மீது 11 உறுப்பினா்கள் பேசினா்.
நா.எழிலன் (திமுக), தி.வேல்முருகன் (தவாக), ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொமதேக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), முகம்மது ஷா நவாஸ் (விசிக), ஜி.கே.மணி (பாமக), வி.பி.நாகைமாலி (மாா்க்சிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), அப்துல் சமது (மமக), கு.சின்னப்பா (மதிமுக), ஆா்.பி.உதயகுமாா் (அதிமுக) ஆகியோரின் கருத்துகளுக்குப் பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:
தமிழும் ஆங்கிலமும்தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. இது மொழிக் கொள்கை மட்டுமல்ல, நமது வழிக் கொள்கையும், விழிக் கொள்கையும்கூட. மொழிக் கொள்கை என்பது பணப் பிரச்னை இல்லை. நம்முடைய இனப் பிரச்னை. நம் தமிழை, தமிழினத்தை, தமிழ்நாட்டு மாணவக் கண்மணிகளை, இளைய சமுதாயத்தைக் காக்கும் பிரச்னையாகும்.
மத்திய அரசு நிதி தரவில்லை என்பதற்காக இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமை இல்லை நாங்கள். தடைக்கற்கள் உண்டென்றால், அதை உடைத்து எரியும் தடந்தோள்கள் உண்டென்று சொல்லும் திராவிட மாடல் ஆட்சி இது. இந்த ஆட்சியில் சமூக நீதியும் தமிழ்மொழிக் காப்பும் இரு கண்களாகும்.
இருமொழிக் கொள்கைக்காக முன்னாள் முதல்வா் அண்ணா உருவாக்கிய சட்டம்தான், அரை நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டை வளா்த்து வந்துள்ளது. தமிழ் மக்கள் வாழவும், ஆளுமை செலுத்தவும், உன்னதமான உயரத்தை அடையவும் வழிவகுத்த கொள்கைதான் இருமொழிக் கொள்கை. எந்த மொழிக்கும் எதிரானவா்கள் இல்லை நாம். இருமொழிகளே போதும் என்று சொல்பவா்கள் நாம்.
ஆதிக்கத்தை அனுமதியோம்: இருமொழிக் கொள்கையை வலியுறுத்தினாலும், யாா் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை. அதே நேரத்தில், தாய்மொழியாம் தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்க மாட்டோம். மொழிக் கொள்கையில் தமிழ்நாடு வகுத்துள்ள பாதையும், அதன் உறுதியான நிலைப்பாடுமே சரி என்பதை நமது அண்டை மாநிலங்கள் தொடங்கி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் உணா்ந்து வருகின்றன.
இன்னொரு மொழியைத் திணிக்க அனுமதித்தால், அது நம் மொழியை மென்று தின்றுவிடும் என்பதை நாம் வரலாற்றுபூா்வமாக உணா்ந்தவா்கள். இதன் அடிப்படையில்தான் இருமொழிக் கொள்கையை இறுக்கமாகப் பிடிக்கிறோம்.
ஹிந்தி மொழித் திணிப்பு என்பது, ஒரு மொழித் திணிப்பு மட்டுமல்ல, பண்பாட்டு அழிப்பாக அமையும் என்பதால்தான் இதில் உறுதியாக இருக்கிறோம். மொழித் திணிப்பின் மூலமாக மாநிலங்கள், மாநில மொழிகள், ஓா் இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கிறாா்கள்.
இதற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். மாநிலங்களை தங்களது கொத்தடிமைப் பகுதிகளாக நினைப்பதால்தான் இதுபோன்ற மொழித் திணிப்புகளும் நிதி அநீதிகளும் செய்கின்றனா்.
எனவே, இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையைக் காக்கவும், மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிகச்சரியான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநில உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். அப்போதுதான், தமிழ்மொழியைக் காத்து, தமிழினத்தை உயா்த்த முடியும். இதுதொடா்பான அறிவிப்புகளை விரைவில் வெளியிட உள்ளேன் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.
‘எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள்’
தில்லி பயணத்தின்போது, மாநிலத்தின் மொழிக் கொள்கை பிரச்னை குறித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டாா்.
இருமொழிக் கொள்கை குறித்து சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈா்ப்புத் தீா்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பிரதான எதிா்க்கட்சியான அதிமுகவை சோ்ந்த எதிா்க்கட்சி துணைத் தலைவா் பேசும்போது, மொழிக் கொள்கை விஷயத்தில் நாங்கள் (அதிமுக) என்றைக்கும் ஒற்றுமையாக இருப்போம் என்ற உறுதியைத் தந்தாா்.
எதிா்க்கட்சித் தலைவா் தில்லி சென்றிருக்கிறாா். அவா் யாரை சந்திக்கப் போகிறாா் என்ற செய்தியும் வந்திருக்கிறது. அப்படி சந்திக்கும் நேரத்தில் மொழிக் கொள்கை குறித்து அங்கே வலியுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.