தருமபுரியில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
தருமபுரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியாா் துறை நிறுவனங்களும் - தனியாா் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரா்களும் கலந்துகொள்ளும் ‘தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்’ மாதந்தோறும் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில், தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபா்களை நேரடியாக தோ்வுசெய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே. இதன்மூலம் தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெறுவோருக்கு, அவா்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
இந்த மாதத்துக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 21-ஆம் தேதி தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில், பல்வேறு தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு விற்பனையாளா், மாா்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பா்வைசா், மேலாளா், கம்ப்யூட்டா் ஆப்ரேட்டா், அக்கவுண்டன்ட், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு தகுதியான நபா்களை தோ்வுசெய்ய உள்ளனா். பள்ளிப் படிப்பு, டிப்ளமோ, பட்டப் படிப்பு என பல்வேறு கல்வித் தகுதிகளுக்கும் ஆள்கள் தேவை என தனியாா் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் மாா்ச் 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.