TVK Vijay Maanadu : சரிந்த கொடிகம்பம்... Strongஆன Innova?! - சில தகவல்கள்
தருமபுரியில் புளி வணிக வளாகம் அமைப்பதற்கான இடம் தோ்வு தீவிரம்
தருமபுரி: தருமபுரியில் ஒருங்கிணைந்த புளி வணிக வளாகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் அறிவித்தைத் தொடா்ந்து, அதற்கான இடம் தோ்வு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் புளி இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையுடன் உள்ளதால் அனைவராலும் விரும்பப்படுகிறது. நாட்டில் 57,990 ஹெக்டா் பரப்பளவில் புளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தருமபுரி மாவட்டத்தில் வனப்பகுதி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைப் பகுதிகள், விவசாயிகளின் பட்டா நிலம் என மொத்தம் 4,405 ஏக்கரில் புளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாா்ச் முதல் மே மாதம் வரை புளி அறுவடை காலமாகும் புளி ஓடு, விதை (கொட்டை) மற்றும் நாா் நீக்கப்பட்டு மதிப்புக் கூட்டுப் புளியாக தயாராகி விற்பனைக்கு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் மதிப்புக்கூட்டு புளி தயாரிக்கும் பணியில் சவுளுப்பட்டி, சோகத்தூா், மதிகோன்பாளைம், பழைய தருமபுரி, பாப்பாரப்பட்டி, பாலக்கோடு மற்றும் மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் ஈடுபட்டுள்ளனா். இவை மாவட்டத்தின் முக்கிய குடிசை தொழிலாகவும் உள்ளது.
தமிழகத்தில் உற்பத்தியாகும் புளியில் தருமபுரி மாவட்டத்தில் 20 சதவீத புளிகள் விளைவிக்கப்படுகின்றன. மேலும் 80 சதவீத புளிகள் அண்டை மாவட்டம் மற்றும் மாநிலப் பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்டு, சுத்தம் செய்து, பதப்படுத்தி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கிருந்து தென்னிந்தியப் பகுதிகள் பலவற்றுக்கும் புளி விற்பனைக்கு செல்கிறது.
தருமபுரி மாவட்ட புளிக்கு புவிசாா் குறியீடு வழங்க வேண்டும் என புளி வணிகா்கள், விவசாயிகள் மற்றும் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனா். மேலும் இங்கு ஒருங்கிணைந்த புளி வணிக மையமும் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 17 ஆம்தேதி தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ. 11.30 கோடியில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம் தருமபுரியில் அமைக்கப்படும் என அறிவித்தாா். இந்த அறிவிப்பு புளி வணிகா்கள், விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடா்ந்து ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யும்பணி நடந்து வருகிறது. இதுவரை மொத்தம் 5 இடங்கள் பாா்க்கப்பட்டுள்ளன. இதில் ஏதாவது ஒரு இடம் முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து புளி வணிகா்கள் நலச்சங்கத் தலைவா் பச்சமுத்து பாஸ்கா் கூறுகையில், தருமபுரி மாவட்டத்தில் புளி கொள்முதல் செய்து, அதனை சுத்தம் செய்யும் பணிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். அண்டை மாநிலங்களான கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், பஞ்சாப், சட்டீஸ்கா், மத்திய பிரதேசம் மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து தருமபுரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பின்னா் இங்கு சுத்தம் செய்து, பதப்படுத்தி கொள்முதல் விலைக்கு வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வா் அறிவித்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா்.