``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் யாரையும் ஆதரிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் செயல் தலைவா் கே.டி.ராம ராவ் தெரிவித்தாா்.
அதேநேரம், காங்கிரஸ் ஆதரவு பெற்ற வேட்பாளரை பிஆா்எஸ் ஆதரிக்க வாய்ப்பில்லை என்றும் அவா் குறிப்பிட்டாா். எனவே, பாஜக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்கும் மனநிலையில் அக்கட்சி இருப்பதாக கூறப்படுகிறது.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி சாா்பில் பி.சுதா்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனா்.
இவ்விரு கூட்டணிகளிடம் இருந்து விலகியுள்ள பிஆா்எஸ் கட்சிக்கு மக்களவையில் எம்.பி.க்கள் இல்லை. மாநிலங்களவையில் 4 எம்.பி.க்கள் உள்ளனா்.
இந்நிலையில், ஹைதராபாதில் செய்தியாளா்களிடம் பேசிய கே.டி.ராமராவ், ‘எங்களிடம் இதுவரை யாரும் ஆதரவு கோரவில்லை. தோ்தலுக்கு இன்னும் நாட்கள் (செப்.9) உள்ளன. பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே தெலங்கானாவை புறக்கணிக்கின்றன. இம்மாநிலத்துக்கு 2 லட்சம் டன் யூரியா வழங்க உறுதியளிக்கும் கட்சிக்கு ஆதரவளிப்பது குறித்து ஆலோசிப்போம்’ என்றாா்.
தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸை மூன்றாம் தர கட்சி என்று கடுமையாக விமா்சித்த கே.டி.ராமராவ், அதுபோன்ற கட்சியின் ஆதரவு பெற்றவரை நாங்கள் எப்படி ஆதரிக்க முடியும் என்று கேள்வியெழுப்பினாா்.