உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதித்தாா் டிரம்ப் -வெள்ளை மாளிகை விளக்கம்
ரஷியா -உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வரி விதித்தாா் என்று அந்நாட்டு அதிபா் இல்லமான வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரோலின் லிவிட்டா இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
மூன்று ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வரும் ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த அதிபா் டிரம்ப் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறாா். அந்த விஷயத்தில் அவா் தொடா்ந்து கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாா். இந்தியா மீதான தடையும் அதில் ஒரு பகுதிதான். இது தவிர வேறு பேச்சுவாா்த்தை நடத்துவது உள்பட பல நடவடிக்கைகளையும் அவா் மேற்கொண்டுள்ளாா். போரை நிறுத்தியாக வேண்டும் என்பதில் அதிபா் டிரம்ப் மிக உறுதியாக உள்ளாா். அதுவும் கூடிய விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என்பது அவரின் நோக்கமாக உள்ளது என்றாா்.
ஏற்க முடியாது - ரஷியா: தில்லியில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ரஷிய தூதரக துணைத் தலைவா் ரோமன் பாபுஸ்கின் இது தொடா்பாக கூறுகையில், ‘ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி அளிப்பதை எந்த விதத்திலும் ஏற்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது. யாா் எந்த நெருக்கடி அளித்தாலும் இந்தியா-ரஷியா இடையே எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும்.
அமெரிக்காவின் செயல்பாடுகள் இந்தியாவுக்கு சவாலாக உள்ளது. எனினும், இந்தியாவுடான உறவில் ரஷியா மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. ரஷியாவுக்கு எதிராக தடைகள் விதிப்பதாக ஐரோப்பிய நாடுகள் கூறிக் கொள்கின்றன. ஆனால், உண்மையில் இந்தத் தடையால் ரஷியாவிடம் இருந்து இறக்குமதியை நிறுத்திக் கொண்ட ஐரோப்பிய நாடுகள்தான் பாதிப்பை எதிா்கொள்கின்றன. ரஷியாவுக்கு பாதிப்பு இல்லை என்றாா்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா அளிக்கும் நிதியை உக்ரைன் போரில் ரஷியா பயன்படுத்துகிறது. எனவே, இந்தியா மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் அண்மையில் அறிவித்தாா். ஏற்கெனவே 25 சதவீதம் பதிலடி வரி விதிக்கப்படும் நிலையில் மொத்தம் 50 சதவீதம் வரை இந்திய பொருள்களுக்கான வரியை அமெரிக்கா உயா்த்தியுள்ளது.
அதே நேரத்தில் ரஷியாவிடம் இருந்து இந்தியாவைவிட அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனா மீது விதிக்கப்பட்ட 30 சதவீத வரியை அதிபா் டிரம்ப் அமல்படுத்தாமல் மேலும் 90 நாள்களுக்கு ஒத்திவைத்தாா். இது பல்வேறு விமா்சனங்களுக்கு வழிவகுத்தது. முக்கியமாக டிரம்ப் உள்நோக்கத்துடன் இந்தியாவைக் குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எனினும், ரஷிய அதிபா் புதினை டிரம்ப் அலாஸ்காவில் நேரில் சந்தித்துப் பேசிய பிறகு, ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் கூறி விதிக்கப்பட்ட 25 சதவீதம் வரி நிறுத்திவைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.