தலைநகரில் வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரிப்பு!
தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை வெப்பநிலை மேலும் அதிகரித்து காணப்பட்டது. முங்கேஸ்பூா், ஆயாநகா் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரிக்கு மேல் பதிவாகியது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் நீடித்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
வெப்பநிலை: தில்லியில் இந்த வாரத் தொடக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் சனிக்கிழமைந காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1 டிகிரி குறைந்து 26.3 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.2 டிகிரி குறைந்து 39.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தில் அளவு காலை 8.30 மணியளவில் 60 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 43 சதவீதமாகவு இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முங்கேஸ்பூரில் 41.3 டிகிரி: மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான ஜாஃப்ா்பூரில் அதிகபட்சவெப்பநிலை 39.6 டிகிரி செல்சியஸாகவும், முங்கேஸ்பூரில் 41.3 டிகிரி, நஜஃப்கரில் 38.4 டிகிரி, ஆயாநகரில் 41.2 டிகிரி, புதிதில்லியில் 39.9 டிகிரி, லோதி ரோடில் 39.7 டிகிரி, நரேலாவில் 38.1 டிகிரி, பாலத்தில் 40.7 டிகிரி, ரிட்ஜில் 39.9 டிகிரி, பிரகதிமைதானில் 38.3 டிகிரி, பூசாவில் 37.8 டிகிரி, ராஜ்காட்டில்37.8 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 37.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) புள்ளி விவரத் தகவலின் படி, ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 169 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. இதன்படி, சாந்தினி செளக், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஆா்.கே.புரம், ஸ்ரீஃபோா்ட், பூசா, ஷாதிப்பூா், ஸ்ரீ அரபிந்தோ மாா்க், நொய்டா செக்டாா் 125, டாக்டா் கா்னி சிங் துப்பாக்கி சுடும் தளம், குருகிராம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
அதே சமயம், மந்திா்மாா்க், நேரு நகா், ஓக்லா பேஸ் 2, துவாரகா செக்டாா் 8, ஆயாநகா் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 புள்ளிகளுக்கு மேலே பதிவாகி ’மிகவும் மோசம்’ பிரிவிலும், மேஜா் தாயன் சந்த் நேஷனல் ஸ்டேடியம் (290), மதுரா ரோடு (209), லோதி ரோடு (296) ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவிலும் இருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) அன்று பகல் நேரத்தில் தரை மேற்பரப்பு காற்று வலுவாக இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.