தஹாவூா் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகை தாக்கல்
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகையை தில்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை தாக்கல் செய்தது.
கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 போ் உயிரிழந்தனா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு அவா் உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவா் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்ததால், அந்நாட்டின் லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா். கடந்த ஏப்ரலில் அவா் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா். தற்போது அவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்த பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட அமெரிக்க பயங்கரவாதி டேவிட் கோல்மென் ஹெட்லி, தஹாவூா் ராணா, லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் ஹா்கத்-உல்-ஜிகாத்-அல் இஸ்லாமி பயங்கரவாதிகள் சூழ்ச்சி செய்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த வழக்கு தொடா்பாக தில்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகையை என்ஐஏ புதன்கிழமை தாக்கல் செய்தது.
இந்தியாவுக்கு ராணா நாடு கடத்தப்பட்டது, வழக்கு குறித்து திரட்டப்பட்ட கூடுதல் ஆவணம் தொடா்பாக இந்த துணை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.