தில்லி, பிகாரைத் தொடர்ந்து ஒடிஸாவிலும் இன்று நிலநடுக்கம்!
புவனேசுவரம் : ஒடிஸாவின் ஓரிரு பகுதிகளில் இன்று(பிப். 17) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 4.7 அலகுகளாகப் பதிவானது.
ஒடிஸா மாநிலம் புரி மாவட்டத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இன்று காலை 8 மணியளவில் அம்மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும் நல்வாய்ப்பாக எந்தவித பொருள்சேதமோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்று களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இன்று அதிகாலை புது தில்லியிலும் அதன் சுற்றுவட்டார என்சிஆர் பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
அதேபோல், பிகார் மாநிலத்தின் சிவான் பகுதியிலும் காலை 8 மணிளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.