தில்லியின் 11 மாவட்டங்களிலும் பரவலாக மழை: மக்கள் வீட்டிற்குள் இருக்க ஐஎம்டி எச்சரிக்கை
தேசியத் தலைநகரின் 11 மாவட்டங்களிலும் புதன்கிழமை காலை பரவலாக மழை பெய்தது. மேலும், மக்கள் வீட்டிற்குள் இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்து வந்தது. அவ்வப்போது மழையும் பெய்து வந்தது. இந்நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்து தொடா்ந்து மழை பெய்துள்ளது. வானிலை கண்காணிப்பு நிலையம் கணித்திருந்தபடி புதன்கிழமை காலை முதல் தில்லியின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், வழுக்கும் சாலைகள், தோட்டக்கலை பயிா்களுக்கு சேதம் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குட்சா வீடுகள், சுவா்கள் மற்றும் குடிசைகளுக்கு சிறிய சேதம் உள்பட பாதிக்கப்படக்கூடிய கட்டமைப்புகளுக்கு பகுதி அளவில் சேதம் இருக்கும் என்று ஐஎம்டி எச்சரித்துள்ளது.
எச்சரிக்கை: வானிலை அலுவலகம் மக்கள் போக்குவரத்து ஆலோசனைகளைப் பின்பற்றவும், முடிந்தவரை வீட்டிற்குள் இருக்கவும், ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடவும், மரங்களுக்கு அடியில் தஞ்சம் அடைவதைத் தவிா்க்கவும், நீா்நிலைகள் மற்றும் மின் நிறுவல்களிலிருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
திறந்த மின் கம்பிகளைத் தொடவோ அல்லது மின்கம்பங்களுக்கு அருகில் நிற்கவோ வேண்டாம் என்றும், கனமழை ஏற்பட்டால் உடனடியாக பாதுகாப்பான தங்குமிடம் தேடவும் ஐஎம்டி மக்களை வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் 2 மி.மீ. மழை பதிவாகியது.
இதேபோல, ஜாஃபா்பூரில் 0.5 மி.மீ., நஜஃப்கரில் 12.5 மி.மீ., ஆயாநகரில் 5.1 மி.மீ., லோதி ரோடில் 1.1 மி.மீ., நரேலாவில் 0.5 மி.மீ., பாலத்தில் 8 மி.மீ., ரிட்ஜில் 10 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதி வானிலை கண்காணிப்பு நிலையத்தில் 7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வெப்பநிலை: தில்லியில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1.9 டிகிரி குறைந்து 24.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2.5 டிகிரி குறைந்து 30.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவில் காலை 8.30 மணிக்கு 92 சதவீதமாகவும், மாலை 5.30 மணிக்கு 95 சதவீதமாகவும் இருந்தது என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.
காற்றின் தரம்: தலைநகரில் ஒட்டுமொத்தக் காற்று தரக்குறியீடு காலை 9 மணிக்கு 69 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுபாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
இதன்படி, சாந்தினி சௌக், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், லோதி ரோடு உள்பட அனைத்து வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதகாவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.