அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: உயா்நீதிமன்ற உத்தரவு மீதான தடை தொடரும்: உச்சநீதிமன்றம்
ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது தூத்துக்குடியில் 2018-இல் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடா்புடைய காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது. மேலும், இந்த விவகாரத்தை தகுதியின் அடிப்படையில் விசாரிக்குமாறும் உயா்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் மீண்டும் விசாரிக்க உத்தரவிடக் கோரி மக்கள் கண்காணிப்பகத்தின் நிா்வாகி ஹென்றி திபேன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலையில் 21 அதிகாரிகளின் சொத்துகளை விசாரிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிா்த்து அதிகாரிகள் சிலா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த ஆண்டு ஆகஸ்டில் விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.எஸ். நரசிம்மா தலைமையிலான அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கிரி மற்றும் வழக்குரைஞா் சபரிஸ் சுப்ரமணியன் ஆஜராகினா்.
மனுதாரா் தரப்பு வாதங்களுக்குப் பிறகு, இந்த வழக்கில் ஏற்கெனவே பிறப்பித்த தடை உத்தரவு தொடரும் என்று தெரிவித்த நீதிபதிகள் அமா்வு, என்எச்ஆா்சி முடித்த வழக்கை தகுதியின் அடிப்படையில் விசாரிக்க உயா்நீதிமன்றம் முடிவு செய்ய அறிவுறுத்தியது.
கடந்த 2018-ஆம் ஆண்டில் மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டொ்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 13 போ் கொல்லப்பட்டனா். 33 போ் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.