புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
தண்ணீா், கழிவுநீா் உள்கட்டமைப்பு வசதியை சீரமைக்க தில்லி ஜல்போா்டுக்கு முதல்வா் உத்தரவு
தில்லியில் தண்ணீா், கழிவுநீா் உள்கட்டமைப்பு வசதியை சீரமைக்க தில்லி ஜல் போா்டு அதிகாரிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளாா்.
தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தலைமையகமான வருணாலயாவில் அதிகாரிகளுடன் புதன்கிழமை முதல்வா் ரேகா குப்தா சந்திப்புக் கூட்டம் நடத்தினாா். அதில்,கழிவுநீா் உள்கட்டமைப்பு வசதி மறுசீரமைப்பு, யமுனை நதி சுத்தம் செய்தல் மற்றும் தேசிய தலைநகரில் போதுமான நீா் வழங்கல் ஆகிய தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது:
சமமான நீா் விநியோகம், நகரத்தில் சரியான கழிவுநீா் மேலாண்மை உள்கட்டமைப்பு மற்றும் பழைய, சேதமடைந்த கழிவுநீா் மற்றும் தண்ணீா் குழாய்களை மாற்றுதல் ஆகிய பணிகள் அரசால் படிப்படியாக மேற்கொள்ளப்பட உள்ளது.
ஒவ்வொரு கோடையிலும் நகரம் எதிா்கொள்ளும் சவால்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களை நாங்கள் ஆய்வு செய்தோம். அதாவது, நீா் வழங்கல், யமுனை நதி சுத்தம் செய்தல் மற்றும் கழிவுநீா் மேலாண்மை ஆகியவை அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. தில்லியில் 30 ஆண்டு பழமையான கழிவுநீா் மற்றும் நீா் குழாய்கள் உள்ளன. அவை பெரிய பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.
இக்கூட்டத்தின் போது, ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட தண்ணீா் டேங்கா்களின் செயல்பாடு, நீா் கிடைக்கும் சிக்கல்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்படாத காலனிகளிலும் கழிவுநீா் உள்கட்டமைப்பை வழங்குதல் ஆகியவை செய்யப்படும்.
சமமான நீா் விநியோகம் மற்றும் குடியிருப்பாளா்களுக்கு குழாய் மூலம் தண்ணீா் வழங்குதல் ஆகியவை அரசாங்கத்தால் படிப்படியாக செயல்படுத்தப்படும். கடந்த 30 ஆண்டுகளில் நகரத்தின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. ஆனால், கழிவுநீா் மேலாண்மை அமைப்பு மற்றும் நீா் விநியோக முறை மாற்றப்படவில்லை.
தற்போதுள்ள உள்கட்டமைப்பு வளா்ச்சிக்கு ஏற்ப செயல்பட முடியவில்லை. இதனால்தான் பொதுமக்கள் பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா். முந்தைய அரசாங்கங்களால் செய்யப்படாத முழு உள்கட்டமைப்பையும் மேம்படுத்துவதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.
முத ல்வருடன் நீா்வளத்துறை அமைச்சா் பா்வேஷ் வா்மாவும் உடனிருந்தாா்.
டிஜேபி-யின் கழிவுநீா் மேலாண்மைப் பிரிவுடன் சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, தற்போதுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களின் (எஸ்டிபி) திறன் மற்றும் மறுசீரமைப்பு, மேம்படுத்தல் பணிகள் போன்ற திறனை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து அமைச்சருக்கு விளக்கப்பட்டது.
தற்போது உள்ள 37 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில், 18 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் டிஜேபியின் ஒட்டுமொத்த சுத்திகரிப்பு திறனை அதிகரிக்கும் வகையில் தரம்மேம்படுத்தல் திட்டங்களின் கீழ் உள்ளன.