தேமுதிக தனித்துப் போட்டியா? பிரேமலதா பதில்!
எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட தயங்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களிடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப் பிறகு பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் நானும், விஜய பிரபாகரனும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். வரும் ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெறவுள்ளது. அதன்பிறகு, தேர்தல் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படும்.
தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமிதான் எழுதி கையெப்பம் இட்டு கொடுத்தார்கள். அந்த ஒப்பந்தத்தை அரசியல் நாகரீகம் கருதி பொதுவெளியில் காண்பிக்கவில்லை.
எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட தயங்காது. தேமுதிக தனித்துப் போட்டியிடுவது குறித்து தற்போது கூற இயலாது. அதிமுகவுடனான சுமூக உறவு குறித்து இப்போது எங்களால் சொல்ல சொல்ல முடியாது. எங்கள் கட்சியை வலுப்படுத்தில் முழு முனைப்போடு செயல்பட்டு கொண்டு இருக்கிறோம்.
கூட்டணி ஆட்சி அமைந்தால் அதை தேமுதிக வரவேற்கும். திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்த செல்வப்பெருந்தகை, தொல். திருமாவளவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், தேமுதிக - திமுக கூட்டணி தொடர்பாக ஸ்டாலினிடம் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும் என்றார்.
தவெகவுடன் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, ”விஜய் எங்கள் வீட்டுப் பையன். ”அரசியல் நிலைப்பாடு குறித்து தற்போது கூற முடியாது. விஜய்யிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்” என்று பதில் அளித்தார்.
இதையும் படிக்க: 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!