தொகுதிகள் மறுசீரமைப்பு: மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகத்துக்கு தண்டனையா? -திமுக
தமிழகத்தில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள விவகாரம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகத்துக்கு கிடைக்கும் தண்டனையா என்று மத்திய அரசுக்கு திமுக கேள்வியெழுப்பியுள்ளது.
மக்களவைத் தொகுதிகளின் மறுசீரமைப்பு நடவடிக்கையை மக்கள்தொகையின் அடிப்படையிலும் தொகுதிகள் எண்ணிக்கையின் விகிதாச்சார அடிப்படையிலும் என இரண்டு விதமான முறைகள் மூலம் மேற்கொள்ள கருதப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பால் தமிழகம் 8 தொகுதிகளை இழக்கக்கூடும் எனத் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வருகின்ற மார்ச் 5-ஆம் தேதி இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், கோவைக்கு இரண்டு நாள்கள் பயணமாக வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது என்று புதன்கிழமை தெரிவித்தார்.
இந்த நிலையில், இது குறித்து திமுக. எம்.பி. ஆ. ராசா அமைச்சர் அமித் ஷாவைக் குறிப்பிட்டு கேள்விகளை எழுப்பியுள்ளார். இன்று(பிப். 26) செய்தியாளர்களுடன் ஆ. ராசா பேசியதாவது: தமிழகத்தில் தொகுதிகள் மறுசீரமைப்புக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்துக்கு பதிலளிக்கும் விதமாக, இன்று(பிப். 26) பேசியுள்ள அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தில் ஒரு தொகுதிகள்கூட குறையாது என்று ஹிந்தியில் பதிலத்திருக்கிறார்.
தமிழகத்தில் இப்போதிருக்கும் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் உயருமா? அல்லது தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படையிலான விகிதாச்சார அடிப்படையில் உயருமா? என்பதற்கு தெளிவான விளக்கம் இல்லை.
மக்கள்தொகையை குறையுங்கள் என்று மத்திய அரசு சொன்னதைப் பின்பற்றி குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் செம்மையாக பின்பற்றி மக்கள்தொகையைக் குறைத்ததற்காக தமிழ்நாட்டுக்கு இந்த தண்டனையா? அரசின் அறிவுரையை பின்பற்றாத மாநிலங்கள் எல்லாம் முன்னேறிய மாநிலங்களா?
நாங்கள் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியிருக்கிறோம். இதன்மூலம், வளர்ச்சித் திட்டங்களால் முன்னேறியிருக்கிறோம். பல துறைகளிலும் தமிழகம் நம்பர்-1, 2 இடங்களில் இருக்கிறது.
நீங்கள் கொடுத்த அறிவுரையை ஏற்றுக்கொண்டு நாங்கள் எடுத்த முயற்சிகளெல்லாம் வெற்றி பெறுகிற இச்சூழலில், எங்களை தண்டிப்பதற்காக ஒரு சட்டத்தை இயற்றுவது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல.
தமிழக தொகுதிகள் எண்ணிக்கை மக்கள்தொகை அடிப்படையில் குறைக்கப்பட்டால் வட மாநிலங்கலள் அதிக உறுப்பினர்களை கொண்டிருக்கும். இப்படியிருக்கையில், நீட், ஹிந்தி எதிர்ப்பு ஆகிய தமிழகத்துக்கு எதிரான விவகாரங்களில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலோ அல்லது ஒருவேளை நடைபெறும்போதோ, நமது குரல் நெரிக்கப்படும். தமிழ்நாடு இந்தியாவின் ஒருபகுதியா? இல்லையா? என்கிற கேள்வி அப்போது எழும்.
உள்துறை அமைச்சர் சொல்வது போல், தமிழகத்துக்கு தொகுதிகள் குறையாது. ஆனால், அதேவேளையில் உத்தரப் பிரதேசத்துக்கு தொகுதிகள் அதிகரித்தாலும் நமக்கே பாதிப்பு உண்டாகும் என்பதை மறுக்க முடியுமா?
புதிய நாடாளுமன்றத்தில் 850 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளனவே.. எதற்காக? “இனி வருங்காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது அவர்கள் எங்கே அமருவார்கள்” என்று அமைச்சர் கடந்த காலங்களில் கேட்டார். இதெல்லாம், தொகுதிகள் மறுசீரமைப்பை மனதில் வைத்துக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே பண்பாடு, ஒரே கலாசாரம், ஒரே இந்தியா என்கிற பாஜகவின் நிலைப்பாடு தமிழகம் உள்பட குறிப்பிட்ட பிராந்தியஙக்ளுக்கு எதிரான நிலைப்பாடுகளேயன்றி வேறென்ன? மாநிலங்களுக்கு எதிரான பண்புகளை பாஜக கொண்டுள்ளது.
நாளைக்கே, தொகுதிகள் மறுவரையறை நடைமுறையானது மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ளப்படாமல், தற்போதுள்ள தொகுதிகள் எண்ணிக்கையின் விகிதாச்சார அடிப்படையில்தான் மேற்கொள்ளப்படுமென்று விளக்கமளித்துவிட்டால், நாங்கள் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. தமிழகத்துக்கு பாதுகாப்பு அவசியம். அதைதான் கேட்கிறோம்! என்று ஆ. ராசா பேசினார்.