தொட்டுப் பார்த்தால் கொழுப்பு, வெட்டிப் பார்த்தாலும் ரத்தம்; தாவரத்திலிருந்து இறைச்சியா?
தொட்டுப் பார்த்தால் கொழுப்பு...
முகர்ந்து பார்த்தால் இறைச்சி வாடை...
வெட்டிப் பார்த்தாலும் ரத்தம்...
ஆனால் இறைச்சி இல்லை...
எப்புர்ரா.....! என்று இருக்கிறதா..?
அதுதான் '3D Plant - based Meat Technology'. முழுக்க முழுக்க தாவரம், காய்கறிகள் மூலம் தாவர இறைச்சி அச்சடிக்கப்படும் இந்த தொழில்நுட்பத்தை பற்றி பார்க்கலாம்.

முதலில் இறைச்சிக்குத் தேவைப்படுவது புரதமும் கொழுப்பும் தான். சோயா, பட்டாணி, கொண்டைக்கடலை போன்றவற்றிலிருந்து புரதத்தையும் காய்கறிகளில் இருந்து கிடைக்கக்கூடிய எண்ணெயையும் (vegetable oil) எடுத்து பேஸ்ட் போன்று அரைக்கின்றனர். கொழு கொழுவென அரைக்கப்பட்ட பசையை அடுக்கு அடுக்காக இறைச்சியை போன்று அச்சடித்து தருகின்றது 3D பிரிண்டர். அச்சடிக்கப்பட்ட இறைச்சியை தொட்டுப் பார்ப்பதற்கும் முகர்ந்து பார்ப்பதற்கும் ஏன்..சுவைத்தால் கூட இறைச்சி போன்றே இருக்கின்றது. இதைத் தான் 'Plant- based Meat' அல்லது '3d Printed Meat' என்கிறார்கள்.
அதெல்லாம் சரி. வெட்டிப் பார்த்தாலும் ரத்தம் கூட வருகிறதே. அது எப்படி என்று கேட்கின்றீர்களா? பீட்ரூட் ஜூஸ் போன்ற இயற்கையான நிறப் பொருட்களைக் கொண்டு செயற்கையான ரத்தத்தையும் சோயாவில் இருந்து எடுக்கப்பட்டும் ஹீம் (Soy leghemoglobin ) இறைச்சியை போன்று ரத்த சுவையையும், ரத்த வாசனையையும் கொடுக்கிறது.
இதைத்தான் 'Plant - based blood' என்கிறோம்.

2018, இஸ்ரேலைச் சேர்ந்த 'Eschar Ben-shitrit' மற்றும் 'Adam Lahav' இருவரும் சேர்ந்து முதன்முதலில் 'ரீடிஃபைன் மீட் (Redefine Meat )' என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இதன் நோக்கம் என்னவென்றால் மிருகங்களை அறுக்காமல் இறைச்சியை தயாரிப்பதற்காகவும், அதிக புரதம் கொண்ட மாற்று உணவை (alternatives) உலகிற்கு வழங்க வேண்டும் என்பதே ஆகும்.
அதற்குப் பிறகு இஸ்ரேல் நாட்டிலேயே தாவரத்திலிருந்து இறைச்சியை தயாரிக்கும் இரண்டாவது நிறுவனமாக 'சேவர் ஈட் (Savor Eat )' , ஸ்பெயினில் 'நோவா மீட் (NovaMeat )', என்று பல நிறுவனங்கள், பத்து ஆண்டுகளில் உருவாகத் தொடங்கி, உலகெங்கும் பிரபலமானது '3D Plant - based Meat Technology'.

உடலுக்கு ஆரோக்கியமா..?
என்னதான் இறைச்சியைப் போலவே சுவை தந்தாலும் இது இயற்கையானது அல்ல; இது அதிகமாக ப்ராசஸ் செய்யப்பட்ட உணவு (Ultra - processed food ) என்றும் இதை தொடர்ந்து உட்கொள்வதால் உடல் நலத்தில் விளைவுகள் ஏற்படலாம் எனவும் குற்றம் சாட்டுகின்றனர், பல ஆய்வாளர்கள். அதேபோன்று அனைவருக்கும் இது இறைச்சியின் சுவையைக் கொடுக்கவில்லை எனவும் தாவரத்தை தாவரமாக சாப்பிடுவதே சிறந்தது; தாவரத்தை இறைச்சியாக மாற்றுவதற்கு அதிக செயல்பாடுகள் தேவைப்படுவதால் விலையும் அதிகமாக இருக்கின்றது என பலரும் விமர்சிக்கின்றனர்.