முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
நாகை-காங்கேசன்துறை கப்பல் சேவை: ஓராண்டுக்கு நிதி உதவியை நீட்டிக்க இந்தியா முடிவு
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரையிலான பயணிகள் கப்பல் சேவையை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.8.62 கோடி நிதியை இந்தியா விடுவிக்கவுள்ளது.
இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘நாகப்பட்டினம்-காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதுடன் ரூ.8.62 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது. கப்பல் சேவைக்கான பல்வேறு செலவுகளைக் கருத்தில்கொண்டு சிறப்பான கடல்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் நிதி விடுவிக்கப்படவுள்ளது.
பிராந்திய இணைப்பு மற்றும் இருநாட்டு மக்களிடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முன்னெடுப்பை இந்தியா மேற்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தக் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்பட்ட பின்பு 15,000 பயணிகள் பயனடைந்துள்ளனா். இரு நாடுகள் இடையேயான கலாசாரம், பொருளாதாரம் மற்றும் சமூகப் பரிமாற்றங்களை மேம்படுத்துவதோடு கடல்சாா் இணைப்பையும் இந்த சேவை வலுப்படுத்துகிறது’ எனக் குறிப்பிடப்பட்டது.