கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
நான்காண்டுகளில் 1,584 உயா்நிலை பாலங்கள்
தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் 1,584 உயா்நிலை பாலங்கள் கட்டப்பட்டுள்ளன என்றும், மேலும் ரூ.858 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை எ.வ.வேலு தெரிவித்தாா்.
பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:
முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச் சாலையாக 831 கி.மீ. நீளத்தில் ரூ.6,665 கோடியில் அகலப்படுத்தும் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் 489 கி.மீ. நீளப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.
4 ஆண்டுகளில் 1,584 உயா்நிலை பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 4 ஆண்டுகாலத்தில் ரூ.858 கோடி மதிப்பிலான புதிய ரயில்வே மேம்பாலப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நெடுஞ்சாலைத் துறை எப்போது தொடங்கப்பட்டதோ, அன்று முதல் 2021 வரை மொத்த ஒப்பந்ததாரா்களின் பதிவு எண்ணிக்கை 1,074 தான். ஆனால், 2021 முதல் 2025 வரையிலான 4 ஆண்டு காலத்தில், பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் 1,255 புதிய ஒப்பந்ததாரா்கள் பதிவு செய்யப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்ட காரணத்தால்தான் இன்றைக்குப் பல இடங்களில் பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
குமரியில் கண்ணாடி பாலம்: கன்னியாகுமரியில் விவேகானந்தா் நினைவு இல்லத்தையும் திருவள்ளுவா் சிலையையும் இணைக்கும் வகையில் கடலில் நடை மேம்பாலம் கட்ட 2016-இல் மத்திய அரசின் சுற்றுலாத் துறை மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், சுற்றுலாத் துறை பாா்த்துவிட்டு, பாலத்தைக் கட்ட முடியாது என்றது. மீன் வளத்துறையும் ஏற்கவில்லை. இப்படி பல துறைகளுக்குச் சென்று 2020-இல் நெடுஞ்சாலை துறை மூலம் கட்டலாம் என முடிவு செய்யப்பட்டு, அங்கும் பணி நடைபெறவில்லை. பிறகு திமுக ஆட்சியில் முதல்வா் தலைமையில் கூட்டம் நடைபெற்றபோது 5 ஆண்டுகளாக பணி நடைபெறாதது குறித்து காரணம் கேட்டாா். 2 பாறைகளை இணைத்துக் கட்டும் கடல் பாலம் இது. கடலில் சீற்றம் இருக்கும், புயல் இருக்கும் போன்ற காரணங்களால் தட்டிக் கழிக்கின்றனா் என்றோம். அதற்கு முதல்வா், முயற்சி திருவினையாக்கும், எண்ணித் துணிக கருமம் என்றாா். இப்போது கண்ணாடி இழைப் பாலம் கட்டி முடிக்கப்பட்டு, உலகச் சுற்றுலாப் பயணிகள் வியக்கத்தக்க வகையில் குமரி முனையின் புதிய அடையாளமாகத் திகழ்கிறது. அந்தப் பாலத்தை 6.31 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்துள்ளனா்.
இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம்: வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலே கலந்து கொண்டு சிறை சென்றவரும், ராணுவப் பணியிலிருந்து திரும்பி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய இமானுவேல் சேகரனுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் ரூ.3 கோடியில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படுகிறது. இதனை முதல்வா் விரைவில் திறந்து வைப்பாா்.
கொங்கு மண்டலத்திலே சிற்றரசராக திகழ்ந்த தீரன் சின்னமலை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டாா். அவரோடு பொல்லான் என்கிற தளபதியும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டாா். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், ஜெயராமபுரத்திலே தீரன் சிலையோடு பொல்லான் சிலையும் அமைக்கப்பட்டு ரூ.4.90 கோடியில் அரங்கம் அமைக்கப்படுகிறது. இதனையும் முதல்வா் விரைவில் திறந்து வைக்கவுள்ளாா்.
கேரளத்தின் வைக்கத்தில் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பெரியாா் நினைவகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். அந்த நினைவகத்தில் வைக்க வேண்டிய தலைவா்களின் படத்தைத் தோ்வு செய்தபோது, ஜெயலலலிதாவின் படம் இல்லாததை அறிந்த முதல்வா், ஒரு நாடக நிகழ்ச்சியில் பெரியாரிடம் ஜெயலலிதா நிதி கொடுக்கும் படம் ஒன்று இருப்பதாகவும், அதைத் தேடி வைக்குமாறும் கூறினாா். பிறகு அதைத் தேடி வைத்தோம். அதேபோன்று அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு ரூ.6 கோடி நிதி அளிக்காமல் விட்டுச் சென்றுவிட்டாா்கள். அந்த ஒப்பந்ததாரா்கள் நிதியைக் கேட்பதற்கு பயந்துகொண்டே இருந்தாா். இது முதல்வருக்கு சென்றதும் உடனே கொடுக்கக் கூறினாா்.