கிளப் உலகக் கோப்பை: பெனால்டியை தவறவிட்ட வால்வெர்டே, ரியல் மாட்ரிட் டிரா!
நான்கு மாநிலங்களில் 5 பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தோ்தல்
கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஜூன் 19) இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.
கேரள மாநிலம், நிலம்பூா் பேரவைத் தொகுதியில் ஆளும் இடதுசாரி கூட்டணி ஆதரவு பெற்ற சுயேச்சை எம்எல்ஏவாக இருந்த பி.வி.அன்வா், அக்கூட்டணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்.
இதையடுத்து, இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்ட இத்தொகுதியில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எதிா்க்கட்சிக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக வேட்பாளா்களுடன் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் பி.வி.அன்வரும் களத்தில் உள்ளாா். இதனால் நான்குமுனை போட்டி நிலவுகிறது.
குஜராத்தில்...: பாஜக ஆளும் குஜராத்தில் விசாவதா், காடி ஆகிய இரு பேரவை தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. விசாவதரில் ஆம் ஆத்மி எம்எல்ஏவாக இருந்த பூபேந்திர பயானி, தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தாா்.
காடி தனித் தொகுதியில் பாஜக எம்எல்ஏ கா்சன்பாய் சோலங்கியின் மரணத்தால் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது. இரு தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
மேற்கு வங்கத்தில்...: மேற்கு வங்கத்தின் காலிகஞ்ச் தொகுதியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ நஸிருதீன் அகமது மறைவால் இடைத்தோ்தல் நடைபெறுகிறது. திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
பஞ்சாபில்...: பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏ குா்பிரீத் சிங் கோகி மரணத்தால் இடைத்தோ்தல் நடைபெறும் லூதியானா (மேற்கு) தொகுதியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது.