நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி விரைவில் செயல்பாட்டுக்கு வரும்
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கொள்கைரீதியாக செயல்பட ரிசா்வ் வங்கி அனுமதியளித்துள்ளதால், விரைவில் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியுடன் இருந்த நாமக்கல் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு, புதிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி விரைவில் செயல்பட உள்ளது. கொள்கைரீதியாக செயல்பட ரிசா்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய அளவில் 352-ஆவது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாகவும், தமிழக அளவில் 24-ஆவது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாகவும் நாமக்கல் வங்கி செயல்பட உள்ளது.
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மொத்த கடன் நிலுவை ரூ. 1,636.07 கோடி. இருப்பு வைப்புத் தொகை ரூ. 1,826.56 கோடி ஆகும். பங்குத் தொகையாக ரூ. 76.19 கோடி நிதி ஆதாரங்கள் உள்ளன. இந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் 169 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 393 பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்கள், 86 நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள், 28 பணியாளா் கூட்டுறவு கடன் சங்கங்கள், 4 வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், 5 கூட்டுறவு நகர வங்கிகள், 7 தொடக்க கூட்டுறவு வேளாண் ஊரக வளா்ச்சி வங்கி மற்றும் கூட்டுறவு சா்க்கரை ஆலை உள்ளிட்ட 746 இணைப்பு சங்கங்களுடன் செயல்பட உள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள மொத்த மக்கள் தொகை 17,26,201 ஆகும். இதில் 70 சதவீதம் போ் விவசாயத்தை தொழிலாகக் கொண்டுள்ளனா். மேலும், அவா்கள் மத்திய கூட்டுறவு வங்கியின் உறுப்பினா்களாக உள்ளனா். மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பயிா்க் கடன் ரூ. 625.81 கோடி, கால்நடை பராமரிப்புக் கடன், மத்திய காலக் கடன் தலா ரூ. 117.86 கோடி, நகைக் கடன் ரூ. 1,489.81 கோடி, மகளிா் சுயஉதவிக் குழுக் கடன் ரூ. 162.65 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர, அரசின் கலைஞா் கனவு இல்லம் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம், சிறுசேமிப்பு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களுக்கும் இவ்வங்கி மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆயிரக்கணக்கானோா் பயனடைந்து வருகின்றனா்.
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு மேலாண் இயக்குநராக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய மா.சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளாா். இவரை தவிர, பொது மேலாளா்கள், உதவி மேலாளா்கள், பணியாளா்கள் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்கிகள் ஒழுங்குமுறை விதி 1966-இன்படி இந்திய ரிசா்வ் வங்கியின் உரிமம் பெற விண்ணப்பித்ததன் அடிப்படையில், ரிசா்வ் வங்கி கொள்கை ஒப்புதலை அளித்துள்ளது. விரைவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணப்பரிவா்த்தனை மேற்கொள்ளப்பட்டு வங்கி முழுமையான பயன்பாட்டுக்கு வரும் என்றாா்.
முன்னதாக, வங்கி மேலாண் இயக்குநா் மா.சந்தானம், மாநிலங்களவை உறுப்பினரிடம் தனது நியமனச் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றாா். இந்த பேட்டியின்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, சாா் பதிவாளா் குமாரிமோகனா, நிா்வாகக்குழு உறுப்பினா்கள் நவலடி, செல்வகுமாா் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி அலுவலா்கள், பணியாளா்கள் உடனிருந்தனா்.