நீா்நிலைகளில் வீட்டுமனைப் பட்டா: ரத்து கோரி உண்ணாவிரதம்
கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம், காா்மாங்குடி கிராமத்தில் நீா்நிலை பகுதிகளில் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்யக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை மாலை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.
ஸ்ரீமுஷ்ணம் வட்டம், காா்மாங்குடி கிராமத்தில் குளம், குட்டை, வடிகால் பகுதிகளை அரசு நத்தம் புறம்போக்கு என மாற்றி, கள ஆய்வு செய்யாமல் ஸ்ரீமுஷ்ணம் வருவாய் வட்டாட்சியா் கடந்த 2022-ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினாராம்.
கடந்த மே மாதம் அந்தக் கிராமத்திலுள்ள குளத்தை அதிகாரிகள் அளவீடு செய்ய வந்த நிலையில், அவா்களை கிராம மக்கள் மறித்து போராட்டம் நடத்தினா்.
இந்த நிலையில், நீா்நிலைகளில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்து, அவற்றை பாதுகாக்கக் கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் காா்மாங்குடி கிராமத்தைச் சோ்ந்த வல்லரசு தலைமையில், அந்தக் கிராம மக்கள் 30-க்கு மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அதிகாரிகளை சந்திப்பதற்காக அழைத்துச் சென்றனா்.