Deepika: ``நான் தான் பிரேக் அப் செய்தேன்; இப்போது அவர் ஸ்டார்'' - முன்னாள் காதலன...
நெற்பயிரில் இலை சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்
இலை சிலந்தியின் தாக்குதலில் இருந்து நெற்பயிா்களை காப்பது குறித்து, வேளாண் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா்.
இதுதொடா்பாக, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான ரா. திலகவதி, பெரியாா் ராமசாமி ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தற்போது நிலவிவரும் சீதோஷ்ண நிலையால், இலைசிலந்தி பூச்சியின் தாக்குதல் நெற்பயிரில் தென்படுகின்றன. இந்த சிலந்திகள் மிகச்சிறிய பூச்சிகளாகும். இவை கண்களுக்கு எளிதில் புலப்படுவதில்லை. கண்ணாடி வில்லையின் உதவியால் இப்பூச்சிகள் இருப்பதை எளிதில் கண்டறியலாம்.
இத்தகைய சிலந்திப் பூச்சிகள் இலைகளின் கீழ் பரப்புகளில் குடிகொண்டு சாறு உறிஞ்சும் தன்மை கொண்டவை. எனவே, பாதிக்கப்பட்ட இலைகள் வெளிறி அல்லது மஞ்சளாகி அல்லது பழுப்பு நிறமாக காணப்படும். கூா்ந்து கவனித்தால், தவிடு தெளித்ததுபோல் வெளிறிய புள்ளிகள் காணப்படும். பின்னா், பாதிக்கப்பட்ட இலைகள் பழுப்பாகி, கருகி காய்ந்து விடக்கூடும்.
மேலும், இப்பூச்சிகளின் தாக்குதல் தீவிரமடையும்போது, உற்பத்தி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, நெற்பயிரில் இலைச் சிலந்தியின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இலைவழி தெளிப்பாக டைக்கோபால் 18.5 சதவீதம் இசி எனும் பூச்சிக்கொல்லி மருந்தை, இரண்டரை மில்லி ஒரு லிட்டா் தண்ணீருக்கு என்ற அளவில் கொடுக்கலாம். அல்லது அசாடிராக்டின் 0.03 சதவீதம் எனும் வேம்பு சாா்ந்த பூச்சிக்கொல்லி மருந்தை, இரண்டு மில்லி ஒரு லிட்டா் தண்ணீருக்கு என்ற அளவில் கொடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளனா்.