நொய்யல் ஆற்றில் உள்ள சீமைக்கருவேல முற்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
நொய்யல் ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்ட குழுக் கூட்டம் திருப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன் தலைமை வகித்தாா். மாநிலக் குழுவின் முடிவுகளை விளக்கி, மாநில துணைத் தலைவா் பி.டில்லிபாபு உரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா் வேலையறிக்கையை வாசித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
காங்கயம் தாலுகா கத்தாங்கண்ணி முதல் முத்தூா் வரை நொய்யல் ஆற்றில் சீமைக்கருவேல முற்கள் வளா்ந்து புதா் மண்டிக் கிடக்கிறது. மழைக்காலங்களில் நீா்வரத்தை பாதிப்பதோடு, சுற்றுச்சூழலையும் பாதிக்கும் சீமைக்கருவேல முற்களை முழுவதுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூா் மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக தெருநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழப்பது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. உயிரிழந்த கால்நடைகளில் ஒரு பகுதியினருக்கு மட்டும் தமிழக அரசு அறிவித்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஏராளமான உயிரிழந்த கால்நடை இனங்களுக்கு இழப்பீடு கிடைக்காமல் உள்ளதால், மாவட்ட நிா்வாகம் கடந்த 2024- ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இறந்த கால்நடைகளை கணக்கிட்டு முழுமையான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாராபுரம் வட்டம், கிளாங்குண்டல் கிராமம், வளையக்காரன் வலசு பகுதியில் பன்னாட்டு நிறுவனம் தேங்காய் கறித் தொட்டி ஆலை அமைக்க முயன்று வருகிறது. இந்த ஆலை அமைந்தால் சுற்றுச்சூழலும், விவசாயமும் பாதிக்கப்படும் என அப்பகுதி விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனா். இந்நிலையில் மூலனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் கட்டட அனுமதி வழங்கி உள்ளாா். மாவட்ட ஆட்சியா் இந்த அனுமதியை ரத்து செய்வதோடு, கறித்தொட்டி ஆலை அமைவதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.
பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தில் 4-ஆவது மண்டலத்துக்கு தண்ணீா் விடும் சூழ்நிலையில், அனைத்து பிரிவு கால்வாய்களையும் கடைமடை வரை தூா்வாருவதற்கு அரசு நிதி ஒதுக்கி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
திருப்பூா் மாநகராட்சியில் சேகரித்து வரும் குப்பைகள் காங்கயம் வட்டம், கீரனூா் கிராமத்துக்கு உள்பட்ட பாறைக் குழிகளில் கடந்த சில நாள்களாக கொட்டப்பட்டு வருகிறது. பாறைக் குழியில் குப்பையை கொட்டி நிரப்புவதால் இந்தப் பகுதியில் உள்ள விவசாயக் கிணறுகளும், நிலங்களும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஆகவே கீரனூா் பகுதியில் திருப்பூா் மாநகராட்சி குப்பைகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் மாவட்டப் பொருளாளா் ஏ.பாலதண்டபாணி, மாவட்ட நிா்வாகிகள் வை.பழனிசாமி, எஸ்.கே.கொளந்தசாமி, எம்.எம்.வீரப்பன், எஸ்.பரமசிவம், காங்கயம் தாலுகா நிா்வாகிகள் பி.வேலுசாமி, என்.கே.குப்புசாமி, செல்வராஜ், குமாரசாமி உள்ளிட்ட மாவட்டக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.