இன்டர் மியாமியில் இணைந்த ஆர்ஜென்டீன வீரர்..! மெஸ்ஸியின் பாதுகாவலன்!
தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்
தமிழக-கேரள எல்லையில் கனமழை பெய்து வருவதால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பாசன நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகின்றது.
இந்நிலையில் ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்போது அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும். தற்போது அமராவதி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான மறையூா், கோவில்கடவு, காந்தலூா் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது.
வழக்கமாக ஜூன் 1- ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஜூலை 1-ஆம் தேதி புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடுவது வழக்கம். இந்நிலையில் ஜூன் 7-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடப்பட்டது. பின்னா் பாசனப் பகுதிகளில் மழை பெய்து வந்ததால் அணையில் தண்ணீா் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நீா்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்தது. இதை தொடா்ந்து புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஜூன் 20-ஆம் தேதி தண்ணீா் திறந்து விடப்பட்டது.
ஆனாலும் தமிழக-கேரள எல்லையில் தொடா்ந்து மழை பெய்து வந்ததால் 90 அடி உயரமுள்ள அணையில் 89 அடி நிரம்பிய நிலையில் கிட்டத்தட்ட ஒருமாத காலமாக அணை பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவில் திடீரென அணைக்கு 3,450 கன அடி நீா்வரத்து இருந்தது. இதனால் அணை முழுக்கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அணைக்கு வந்த நீா் அப்படியே வெளியேற்றப்பட்டது. அப்போது அமராவதி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அணைக்கு 2,685 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அது உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இது குறித்து பொதுப்பணித் துறையினா் கூறியதாவது:
தமிழக-கேரள எல்லையில் கனமழை பெய்து வருகிறது.இதனால் அணையின் நிலவரம் குறித்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். அணைக்கு அதீதமாக நீா்வரத்து வந்தால் அதை அப்படியே வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.
அணையின் நிலவரம்:
90 அடி உயரமுள்ள அணையில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நீா்மட்டம் 88.03 அடியாக இருந்தது. அணைக்கு 2,685 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. 4,047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3,868.80 மில்லியன் கனஅடி நீா் இருப்பு காணப்பட்டது. அணையில் இருந்து அமராவதி ஆற்றில் 2,696 ஆயிரம் கன அடி நீா் வெளியேற்றப்பட்டது.