வில் ஜாக்ஸ் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 156 ரன்கள் இலக்கு!
பஞ்சாப்பின் 20 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை!
பஞ்சாப் மாநிலத்தின் 20 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களினால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் போர்ப் பதற்றம் நிலவி வருகின்றது. இதனால், அனைத்து மாநிலங்களும் மே.7 ஆம் தேதியன்று பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று (மே.5) அறிவுறுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் போர்ப் பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தத் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக பாகிஸ்தானுடனான எல்லையிலுள்ள மாநிலங்களில் இந்த ஒத்திகைகளுக்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் தேர்வுச் செய்யப்பட்ட 20 இடங்களில் நாளை (மே.7) பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்படும் என அம்மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், அம்மாநிலத்தின் ஃபெரோஸ்ப்பூர், லூதியானா, அமிர்தசரஸ், பதிந்தா, குருதாஸ்பூர், ஹோஷியார்பூர், ஜலந்தர், பட்டியாலா, பதான்கோட், பர்னாலா மற்றும் மோஹாலி ஆகியப் பகுதிகளில் இந்த ஒத்திகைகள் நடத்தப்படவுள்ளன.
இந்த ஒத்திகைகளுக்கான நோக்கம் தாக்குதல்கள் நடைபெறும் சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்குவது என்றும் இதில் உள்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிவுறுத்தல்கள் கடைபிடிக்கப்படும் எனவும் அமைச்சர் ஹர்பால் சிங் சீமா கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஒத்திகைகளின் ஒருப்பகுதியாக ஃபெரோஸ்பூரில் இரவு 7 மணி முதல் 7.15 மணி வரையில் அபாய ஒலி (சைரன்) ஒலிக்கப்படும் எனவும் இரவு 9 முதல் 9.30 மணி வரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு முழுவதுமாக இருள் ஒத்திகைக் கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஹரியாணா மாநிலத்தின் அம்பாலா, ஃபரிதாபாத், குருகிராமம், ஹிஸார், பஞ்சுகுலா, பனிபாட் மற்றும் ரோஹ்தாக் ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பு ஒத்திகைகள் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: போர்ப் பாதுகாப்பு ஒத்திகையில் என்ன நடக்கும்? மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?