அமிர்தசரஸ் கள்ளச்சாராயம் விவகாரம்: 21 பேர் பலி! ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!
பஞ்சாப்பில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலி!
பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமிர்தசரஸின் மஜிதியா பகுதியில் நேற்று (மே 12) விற்பனைச் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்த பங்கலி, படல்புரி, மராரி கலான், தெரேவால் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 17 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சாராயம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எத்தனால் எனும் ரசாயணத்திற்கு பதிலாக இணையத்தில் வாங்கிய மெதனால்-ஐ பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலியானவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளிகள் எனக் கூறப்படும் நிலையில் இதற்கு காரணமான குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் உறுதியளித்துள்ளார்.
ஆனால், இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் கலால் துறை அமைச்சர் ஹர்பால் சிங் சீமா ஆகியோர் பதவி விலக வேண்டுமென அம்மாநில எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தக் கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனைச் செய்த முக்கிய குற்றவாளியான பிரப்ஜித் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் என 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கள்ளச்சாராயத்தை விநியோகித்த ஏராளமானோர் காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கைகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளையில், அமிர்தசரஸ் மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டு, வீடுவீடாகச் சென்று இந்தக் கள்ளச்சாராயம் அருந்தி யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று சோதனை மேற்கொண்டனர்.
முன்னதாக, கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் பஞ்சாப்பின் சங்குரூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஓய்வுக்குப் பிறகு எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை: சஞ்சீவ் கன்னா