சர்ச்சையைக் கிளப்பிய சந்தானத்தின் புதியபட பாடல்!
நடிகர் சந்தானத்தின் புதிய திரைப்படத்தின் பாடல் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சந்தானம் கதாநாயகனாக நடித்து, பிரேம் ஆனந்த் இயக்கிய ‘டிடி ரிடர்ன்ஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர்களது கூட்டணியில் உருவான புதியபடம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’.
நடிகர் ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பள்’ நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படம் வரும் மே 16 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், கெளுத்தி என்பவர் எழுதிய வரிகளில், இசையமைப்பாளர் ஆஃப்ரோ இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடலான ‘கிஸ்ஸா 41’ கடந்த பிப்ரவரி மாதம் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. தற்போது வரை இந்தப் பாடல் இணையத்தின் சுமார் 92 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
இந்தப் பாடலில் பெருமாளைக் குறித்து வெளியான ‘கோவிந்தா கோவிந்தா’ எனும் பிரபல பக்திப் பாடலின் வரிகள் மற்றும் அதன் ராகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சிலரது மத நம்பிக்கைகளை புண்படுத்தவதாகக் கருதப்படுவதினால் படம் வெளியாவதற்கு இன்னும் சில நாள்களேவுள்ள நிலையில் இது பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டுமெனவும் நடிகர் சந்தானத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாஜக வழக்கறிஞர்கள் சிலர் சேலம் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர்.
இதேபோல், இந்தப் பாடல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துமாறு ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து புகாரளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:எந்தன் உலகம் நீயே... சின்ன திரை நடிகர் நாஞ்சில் விஜயன் உருக்கம்!