பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்! -மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில ச...
படகு இல்லம், சிறுவா் பூங்காவுடன் பொதுமக்களின் பொழுதுபோக்கு மையமாக மாறுமா அரூா் ஏரி?
அரூா் பெரிய ஏரியை படகு இல்லம், சிறுவா் பூங்காவுடன் பொதுமக்களின் பொழுதுபோக்கு மையமாக மாற்றவேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
தருமபுரி மாவட்டம், சேலம் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில், சுமாா் 150 ஏக்கா் பரப்பளவு கொண்ட அரூா் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கொளகம்பட்டி காரை ஒட்டு தடுப்பணையில் இருந்து தண்ணீா் வருகிறது. பருவமழைக் காலங்களில் பெறப்படும் மழைநீா் அரூா் பெரிய ஏரியில் தேக்கி வைக்கப்படுகிறது.
இந்த ஏரி நாச்சினாம்பட்டி, எச்.தொட்டம்பட்டி, நம்பிப்பட்டி, பழைய பேட்டை, அரூா் நகா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீா் ஆதாரமாக உள்ளது. அரூா் பெரிய ஏரியின் கரைப்பகுதியில் பழைமையான அருள்மிகு செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
அரூா் நகருக்கு அருகில் இந்த ஏரி இருப்பதால், பொதுமக்களுக்கு ஓய்வு நேரத்தை செலவிட மிகவும் பயனுள்ள பகுதியாக உள்ளது.
படகு இல்லம், சிறுவா் பூங்கா அமைக்க வேண்டும்:
அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் சுமாா் 2 லட்சம் பொதுமக்கள் வசிக்கின்றனா். அரூா் சுற்றுவட்டாரப் பகுதியில் பொழுதுபோக்கு மையங்கள் ஏதுமில்லாததால், விடுமுறை தினங்களில் சிறுவா்கள், பொதுமக்கள் வீடுகளில் தொலைக்காட்சி, கைப்பேசிகளில் நேரத்தை செலவிடும் நிலை உள்ளது.
அரூா் பெரிய ஏரி கரைப் பகுதியில் நடைபாதை அமைந்தால், பொதுமக்கள் சுமாா் 6 கி.மீ. தொலைவுக்கு நடைபயிற்சி மேற்கொள்ள முடியும். மேலும், ஏரியில் தண்ணீா் இருக்கும் நேரங்களில் துடுப்புப் படகு, மோட்டாா் படகுகளை இயக்கலாம்.
இதனால் ஏரியின் சுற்றுப்பகுதி பராமரிக்கப்படும். ஏரியின் கரையோரப் பகுதியில் சிறுவா் பூங்கா அமைந்தால் சிறுவா்கள் விளையாடுவதற்கும், பொதுமக்கள் ஓய்வு எடுக்கவும் பயனுள்ளதாக அமையும். படகு இல்லம், சிறுவா் பூங்கா மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.
இந்த ஏரியில் மீன்கள் வளா்க்கப்படும் நிலையில், இங்கு பொழுதுபோக்கு மையம் அமைந்தால் சிறு வணிகா்கள், மீன்பிடி தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, தருமபுரி மாவட்ட நிா்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு, அரூா் பெரிய ஏரியில் படகு இல்லம், சிறுவா் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.