ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கங்கனா ரணாவத்..! குவியும் வாழ்த்துகள்!
Operation Sindoor: இந்திய ரஃபேல் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? - பிரெஞ்சு உளவுத்துறை சொல்வதென்ன?
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் எனும் தாக்குதலை தொடங்கியது இந்தியா. இதற்கு பதிலடி என இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்திருக்கிறது. எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு அதிகரித்திருப்பது இரு நாட்டின் எல்லைப்பகுதிகளை ஆபத்தான பகுதிகளாக மாற்றியிருக்கிறது.
ஆபரேஷன் சிந்தூர் என்றப் பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலில், தீவிரவாத முகாம்கள் மட்டும் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டதாக இந்தியா தெரிவித்திருந்த நிலையில், பாகிஸ்தான் அதை முழுமையாக மறுத்திருக்கிறது.

இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதிகளில் 3 வயது சிறுமி உட்பட குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 46 பேர் காயமடைந்ததாகவும், ஆறு இடங்களில் மசூதிகள் தாக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
1971-ம் ஆண்டு நடந்த போருக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தானுக்குள் நடத்திய மிக ஆழமான தாக்குதல்கள் என்றும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்திருக்கிறது.
காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஓசி) இந்தியப் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் குறைந்தது 16 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு மத்தியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியத் தரப்பில் இருந்து ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த ட்ரோன் தாக்குதல் குறித்து பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள், ``புதன்கிழமை அதிகாலை மூன்று ரஃபேல் விமானங்கள் உட்பட ஐந்து இந்திய விமானப்படை ஜெட் விமானங்களையும், ஒரு ட்ரோனையும் சுட்டு வீழ்த்தினோம். நேற்று இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியிருக்கிறோம்" என்றனர்.

இது குறித்து CNN செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரெஞ்சு உளவுத்துறையின் உயர் அதிகாரி ஒருவர், ``பாகிஸ்தான் ஒரு ரஃபேலை சுட்டு வீழ்த்தியது உறுதியாக தெரிகிறது. மேலும் ஏதேனும் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்று பிரெஞ்சு அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்" என்றார்.
இந்தியாவின் வான்வழித் தாக்குதல்களின் போது பாகிஸ்தான் படைகள் குறைந்தது ஒரு இந்திய ஜெட் விமானத்தையாவது சுட்டு வீழ்த்தியது உண்மை என அமெரிக்க உளவுத்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் உள்ள இராணுவ முகாம்களை ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் பாகிஸ்தான் குறிவைத்து வருவதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.
அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் பல இடங்களில் வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதாக இந்தியா உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும், பாகிஸ்தானிலிருந்து இந்தியக் காஷ்மீரை நோக்கி எட்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அவை அனைத்தும் இந்தியாவின் வான் பாதுகாப்புப் பிரிவுகளால் இடைமறித்து தடுக்கப்பட்டன என்றும் இந்தியா தெரிவித்திருக்கிறது.