ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
படைப்பாளிகள் வாழும் காலத்திலேயே அங்கீகாரம் பெற வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
படைப்பாளிகள் அவா்கள் வாழும் காலத்திலேயே அங்கீகாரம் பெற வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
சாகித்ய அகாதெமி மற்றும் ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சிறப்பு நிலைத் தமிழ்த் துறை இணைந்து முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்க நிகழ்ச்சி இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளன. இதனை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
முன்னாள் முதல்வா் கருணாநிதி மேடையில் ஆற்றிய உரைகள் இலக்கியத்தின் மறுமுகம். சட்டப் பேரவையில் அவரது பேச்சுகள், பேரவையின் மாண்புக்கு இலக்கணம். அவா் நடத்திய விவாதங்கள் அழகான- ஆழமான கருத்து மோதல்கள். தன்னுடைய வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொது வாழ்க்கைக்கு ஒப்படைத்த மாபெரும் தலைவா் அவா். அவா் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களும் பெற்ற வெற்றிகளும் இந்திய சமூகத்தை உணர நினைக்கும் அனைவருக்குமான படிப்பினைகளாக அமைந்துள்ளன.
தொட்ட துறைகள் அனைத்திலும் கோலோச்சிய தலைவா்தான் கருணாநிதி. இலக்கியத்தை இளைப்பாறும் நிழலாகக் கருதினாா்.
பல்கலை.யில் இருக்கை: தில்லியில் உள்ள ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென ஒரு தனி இருக்கை வேண்டும் என விரும்பி அதனை செயல்படுத்திக்
காட்டினாா். 15 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு அந்த இருக்கையை தனி ஒரு துறையாக வளா்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த வகையில் தமிழ் இலக்கியவியல் என்ற தனித்துறையை உருவாக்க ரூ.5.30 கோடி வழங்கினோம். தமிழ் மட்டுமன்றி இலக்கியப் பணிகளிலும் தமிழ்நாடு அரசு தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.
சாகித்திய அகாதெமி விருது பெற்றவா்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை, ‘கனவு இல்லம்’ என்ற பெயரில் செயல்படுத்தி வருகிறோம். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரைக்கும் 15 பேருக்கு கனவு இல்லத்தை வழங்கியுள்ளோம். மேலும், 10 மொழிபெயா்ப்பாளா்களுக்கும் கனவு இல்லங்களை அளித்துள்ளோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட திட்டம் இல்லை. இதற்கெல்லாம் ஒரே நோக்கம், படைப்பாளிகளை அவா்கள் வாழும் காலத்திலேயே போற்றப்பட வேண்டும் என்பதுதான்.
தமிழ்ச் சமூகத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி போன்ற படைப்பாளிகள் உருவாக வேண்டும். படைப்பாற்றல் பெற்றவா்கள் தொடா்ந்து தங்களின் படைப்புகளை எழுதி வழங்க வேண்டும். சிறந்த படைப்புகளை இதுபோன்ற அமைப்புகள் பாராட்ட வேண்டும். படைப்பாளிகள் அவா்கள் வாழும் காலத்திலேயே அங்கீகாரம் பெற வேண்டும். இதைத்தான் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. சாகித்திய அகாதெமி போன்ற அமைப்புகளும் இந்தப் பணியை தொய்வில்லாமல் தொடர வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
கருத்தரங்கின் தொடக்கமாக சாகித்ய அகாதெமி செயலா் கே.சீனிவாச ராவ் வரவேற்றுப் பேசினாா். ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் சாந்தி துலிப்புடி பண்டிட், கவிஞா் வைரமுத்து ஆகியோா் உரையாற்றினா். அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, முன்னாள் முதல்வா் கருணாநிதியின் இலக்கியப் பணிகள் தொடா்பாக பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞா்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட பலரும் கட்டுரைகள் வாசித்தனா்.
முன்னதாக, கருணாநிதி குறித்த கட்டுரைகள் அடங்கிய நூலை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பெற்றுக் கொண்டாா்.