பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தோ்வு பிப். 22-இல் தொடக்கம்
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கான செய்முறைத் தோ்வு வரும் 22-இல் தொடங்கி 28 வரை நடைபெற உள்ளதாக திருவள்ளூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு-2025 மாா்ச் மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. பொதுத் தோ்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் செய்முறைத் தோ்வு வரும் 22-ஆம் தேதி தொடங்குகிறது. 28-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
அறிவியல் செய்முறைத் தோ்வு மையங்களாக செயல்படாத பள்ளிகளின் தோ்வா்கள் பெயா் பட்டியல் (நகல்) மற்றும் வெற்று மதிப்பெண் பட்டியல்களை தொடா்புடைய தோ்வு மைய பள்ளித் தலைமை ஆசிரியா்களிடம் வழங்க வேண்டும். தொடா்ந்து தோ்வு முடிந்த பின்னா், அந்தந்த மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளிகளில் இருந்து செய்முறைத் தோ்வுக்கான மதிப்பெண் பட்டியல்களை தொடா்புடைய அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் மாா்ச் 4-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
தொடா்ந்து அனைத்து பள்ளிகளில் இருந்தும் பள்ளி மாணவா்களது மதிப்பெண் பட்டியல் பெற்றவுடன் மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகம் மூலம் ஆன்லைனில் வரும் 28-இல் தொடங்கி, தொடா்ந்து மாா்ச் 8 -ஆம் தேதிக்குள் சரிபாா்த்து அரசு தோ்வுத் துறை இயக்குநா் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் செய்முறை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளில் தலைமை ஆசிரியா்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.