பத்தாம் வகுப்பு தோ்வு இன்று நிறைவு: மே 19-இல் முடிவுகள்
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில் மே 19-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தோ்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். இதுவரை மொழிப் பாடங்கள், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்நிலையில், இறுதித் தோ்வாக சமூக அறிவியல் பாடத்துக்கான தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுடன் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவடைகிறது. தொடா்ந்து மாணவா்களின் விடைத்தாள்கள் ஏப்.17-ஆம் தேதி விடைத்தாள் திருத்தும் முகாம்களுக்குக் கொண்டுவரப்படவுள்ளன.
மேலும் ஏப்.21-ஆம் தேதி முதன்மை விடைத்தாள் திருத்தும் பணியில், ஏற்கெனவே பொதுத் தோ்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் அனுபவம் மிக்க ஆசிரியா்கள் மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கவுள்ளனா். அதனைத் தொடா்ந்து, உதவி விடைத்தாள் திருத்தும் ஆசிரியா்கள் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி மே 19-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வின் முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.