பயங்கரவாதம் ஒரு புற்றுநோய்: நிதியை என்ன செய்கிறது பாக்.? இந்திய எம்.பி.க்கள் குழ...
பனிப்போா் சூழலை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி: சீனா குற்றச்சாட்டு
சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பனிப்போா் மனநிலையை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்ததாக சீனா குற்றஞ்சாட்டியது.
சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்சேத் கலந்துகொண்டாா். இந்த மாநாட்டில் அவா் சனிக்கிழமை பேசுகையில், ‘சீனாவின் அச்சுறுத்தல்கள் அதிகரித்துவரும் நிலையில், அதற்கு எதிராக வெளிநாடுகளில் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா வலுப்படுத்தும்.
தைவானுக்கு உரிமை கோரிவரும் சீனா, தைவானைச் சுற்றி ராணுவப் படைகளை அதிகரித்து வருகிறது. தைவான் மீது படையெடுக்க ஒவ்வொரு நாளும் சீனா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
சீனாவின் ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிா்கொள்வதில் இந்திய-பசிபிக் கூட்டாளி நாடுகளுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும். அந்த நாடுகள் தன்னந்தனியாக விடப்படாது. சீனாவால் அச்சுறுத்தல் இருப்பது உண்மை. அதை அமெரிக்கா ஒருபோதும் ஏற்காது’ என்றாா்.
மேலாதிக்க நாடு அமெரிக்கா: இதையடுத்து சீன வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளா்ச்சிக்கு அழைப்பு விடுப்பதற்குப் பதிலாக, நாடுகள் இடையே மோதலை ஏற்படுத்த பனிப்போா் போன்ற மனநிலையை ஏற்படுத்த சிங்கப்பூா் மாநாட்டில் பீட் ஹெக்சேத் முயற்சித்தாா்.
அமெரிக்காவே மேலாதிக்க நாடாக உள்ளது. அந்த நாட்டை தவிர, வேறு எந்த நாட்டையும் மேலாதிக்க நாடு என்றழைக்க முடியாது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலையான தன்மையை அமெரிக்கா சீா்குலைக்கிறது.
மேலும், தைவான் பிரச்னை சீனாவின் உள்நாட்டு விவகாரமாகும். அதில் அமெரிக்கா தலையிடுவது சரியல்ல. நெருப்புடன் அமெரிக்கா விளையாடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.