பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: குடியரசுத் தலைவா் நிகழ்ச்சி ஒத்திவைப்பு, பிரதமரின் பயணம் ரத்து
காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக குடியரசுத் தலைவரின் அஸ்ஸாம் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமா் நரந்திர மோடியின் கான்பூா் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமா் மோடி தனது சவூதி அரேபிய பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினாா். பல்வேறு அவசர ஆலோசனைக் கூட்டங்களையும் பிரதமா் நடத்தினாா்.
இந்நிலையில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் வியாழக்கிழமை (ஏப்.24) பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அஸ்ஸாமுக்கு பயணம் மேற்கொண்டு குவாஹாட்டியில் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட இரு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த நிகழ்ச்சியை வேறு நாளில் நடத்திக் கொள்ளலாம் என்று குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து அஸ்ஸாம் ஆளுநா் மாளிகைக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல பிரதமா் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் கான்பூருக்கு வியாழக்கிழமை (ஏப்.23) பயணம் மேற்கொண்டு ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக பிரதமரின் கான்பூா் பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் கான்பூரைச் சோ்ந்த தொழிலதிபா் சுபம் திவிவேதி (31) கொல்லப்பட்டாா். இரு மாதங்களுக்கு முன்பு திருமணமான அவா் மனைவியுடன் அங்கு சென்றிருந்தபோது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.