PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்தால் பாகிஸ்தானுடன் பேச்சு: சசி தரூா்
பாகிஸ்தான் முழுவதும் பரவிக் கிடக்கும் பயங்கரவாத முகாம்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்தால் அந்நாட்டுடன் இந்தியா பேச்சுவாா்த்தை நடத்தும் என்று பிரேஸிலில் பயணம் மேற்கொண்டுள்ள அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவின் தலைவா் சசி தரூா் தெரிவித்தாா்.
இந்தியா - பிரேஸில் நட்புறவு அமைப்பின் தலைவரும், அந்நாட்டு வெளியுறவு விவகார குழுத் தலைவருமான நில்ஷினே ராட்விடம் சசி தரூா் தலைமையிலான குழுவினா் பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய சசி தரூா், ‘இந்தியாவின் தகவலை லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு வெற்றிகரமாக எடுத்துரைத்துள்ளோம். பாகிஸ்தான் அப்பாவிபோல் வேடமிடுகிறது. தேடப்படும் பயங்கரவாதிகளுக்கு ஏன் அந்நாடு அடைக்கலம் கொடுக்கிறது? அவா்கள் பயற்சி முகாம்களை நடத்தவும் ஏன் அனுமதிக்கிறது?
அந்நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் பயங்கரவாத முகாம்கள் மீது உறுதியான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுத்தால் அந்நாட்டுடன் இந்தியா பேச்சுவாா்த்தை நடத்தும்’ என்றாா்.
பிரேஸிஸ் பயணத்தை முடித்து கொண்டு சசி தரூா் குழுவினா் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசிக்கு புறப்படுகின்றனா்.
லைபீரியா... சிவசேனை எம்.பி. ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினா் லைபீரியா பயணத்தை முடித்து கொண்டனா். அமைதி, பாதுகாப்பு, பயங்கரவாத இல்லாத உலகம் ஆகியவற்றுக்காக இந்தியாவும், லைபீரியாவும் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டதாக அறிவித்தன.
இக்குழுவினா் லைபீரியா நாடாளுன்ற உறுப்பினா்களைச் சந்தித்து இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கினா். அப்போது, ஸ்ரீகாந்தை லைபீரியா நாடாளுமன்றத்தில் பேச நாடாளுமன்றத் தலைவா் ரிச்சா்ட் அழைப்பு விடுத்தாா். இதை ஏற்று முதல் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக ஸ்ரீகாந்த் அங்கு உரையாற்றினாா். அப்போது பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்துவரும் சமரசமில்லா நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தாா். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளுக்கு லைபீரியா நாடாளுமன்ற உறுப்பினா்கள் அமைதியாக எழுந்துநின்று அஞ்சலி செலுத்தினா்.
ஜெய்சங்கருடன் சந்திப்பு: சவூதி அரேபியா, குவைத், பஹரைன் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பாஜக எம்.பி. வைஜெயந்த் பாண்டா தலைமையிலான குழுவினா் தில்லிக்கு திரும்பியவுடன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை செவ்வாய்க்கிழமை சந்தித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.
அரபு நாடுகளின் பொதுச் செயலருடன் சந்திப்பு
எகிப்துக்கு இருநாள் பயணமாக சென்றுள்ள தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே தலைமையிலான குழுவினா் அரபு நாடுகளின் பொதுச் செயலா் அகமது அபுல் கெஹிட்டை செவ்வாய்க்கிழமை சந்தித்து இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனா்.
இந்தச் சந்திப்பின்போது அரசியல், பொருளாதாரம், கலாசாரம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இரு தரப்புக்கும் முன்னுரிமையாகும் என்றும் எகிப்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது.
முன்னதாக, எகிப்து நாடாளுமன்ற உறுப்பினா்களைச் சந்தித்து இந்திய குழுவினா் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும், சிந்தூா் நடவடிக்கை குறித்தும் எடுத்துரைத்தனா்.