பயங்கரவாதிகளை தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்ட பிபிசி: வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு!
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தீவிரவாதிகள் என்று குறிப்பிட்ட பிபிசி நிறுவனத்தின் செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனமும் தீவிரவாதிகள எனக் குறிப்பிட்டிருந்ததற்கு அமெரிக்க வெள்ளை மாளிகை ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்திருந்தது.
ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர்.
இதுதொடர்பான செய்திகளை வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ், பிபிசி போன்ற சர்வதேச ஊடகங்கள் பயங்கரவாதிகள் (terrorist - டெரரிஸ்ட்) என்று குறிப்பிடாமல், தீவிரவாதிகள் (Militants - மிலிடன்ட்ஸ்) என்று குறிப்பிட்டது சர்ச்சையானது.
இந்த விவகாரத்தில் நியூயார்க் டைம்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்க வெள்ளை மாளிகை ஞாயிற்றுக்கிழமை கண்டனத்தை தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளை தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிபிசியின் இந்திய தலைவர் ஜாக்கி மார்ட்டினுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தை வெளியுறவுத் துறை அமைச்சகம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வெறுப்பை தூண்டும் வகையில் இந்தியாவுக்கு எதிராக பொய்ப் பிரசாரத்தை மேற்கொள்வதாக பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளைத் தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்ட அமெரிக்க ஊடகம்
தீவிரவாதம் என்பதற்கும் பயங்கரவாதம் என்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. தீவிரவாதம் என்பது அரசியல் அல்லது ஒரு சமூக மாற்றத்துக்காக கடுமையாகப் போராடும் கிளர்ச்சியாளர்களைக் குறிக்கும்.
ஆனால், பயங்கரவாதம் என்பது நாட்டுக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியவர்கள். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து ஊடுருவி, குறிப்பிட்ட நாட்டுக்குள் பயங்கரவாதத்தை ஏற்படுத்துவார்கள். இவர்கள் ஆயுதம் ஏந்தி, வன்முறையில் ஈடுபடுவதுடன், அப்பாவி மக்களையும் தாக்குவர்.