சூப்பர் 4 சுற்றில் டிரா: நடப்பு சாம்பியன் ஜப்பானை வெளியேற்றியது இந்தியா!
பருவமழை பேரழிவில் ஹிமாசல்: 386 பேர் பலி, 574 சாலைகள் மூடல்!
ஹிமாசலப் பிரதேசத்தைப் புரட்டிபோட்ட பருவமழை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அங்குப் பலி எண்ணிக்கை 386 ஆக உயர்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
பருவமழை தொடங்கியதில் இருந்து ஹிமாசல் மாநிலம் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றது. தொடர் மழை வெள்ளம் காரணமாக பலர் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இன்று காலை நிலவரப்படி, மொத்தம் 574 சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. 389 விநியோக மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மழை மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து 333 நீர் வழங்கல் திட்டங்கள் செயலிழந்துள்ளன.
ஜூன் 20 முதல் இந்தாண்டு பருவமழைக்குப் பலியானோர் எண்ணிக்கை 386 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் திடீர் வெள்ளம் நிலச்சரிவுகள், வீடுகள் இடிந்து விழுதல், நீரில் மூழ்குதல் உள்ளிட்ட காரணங்களால் 218 பேரும், சாலை விபத்துகளில் 168 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக குலு 174 சாலைகளும், மண்டியில் 166 சாலைகளும் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. சிம்லா மாவட்டத்தில் 48 சாலைகள், காங்க்ராவில் 45, சம்பாவில் 44 மற்றும் சிர்மௌரில் 28 சாலைகள் மூடப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை -03 (மனாலி-கீலாங்), தேசிய நெடுஞ்சாலை -305 (அன்னி-ஜலோரி) மற்றும் தேசிய நெடுஞ்சாலை-503A (உனா பகுதி) உள்ளிட்ட முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. உயரமான பள்ளத்தாக்குகள் மற்றும் சுற்றுலா மையங்களுக்கான இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பொதுப்பணித் துறை, மாநில மின்சார வாரியம், ஜல் சக்தித் துறை ஆகிய குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், தொடர்ச்சியான மழை மற்றும் புதிய நிலச்சரிவுகள் சீரமைப்பு பணிகளுக்கு இடையூரை விளைவித்து வருகின்றன.
செப்டம்பர் கடைசி வாரம் வரை பருவமழைக்கான அறிகுறிகள் இருப்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மக்களைப் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.