இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மகள் கொடுத்திருக்கும் வரதட்சணைப் புகார்! பின்னணி ...
பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்களுக்கு எதிரான குழு: வேலூா் ஆட்சியா்
ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் போதைப் பொருள்களுக்கு எதிரான குழு அமைக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.
போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு, நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பேசியது -
காவல்துறை, உணவு பாதுகாப்பு துறை, மருந்து கட்டுப்பாட்டு துறை, மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி துறைகள் மூலம் கல்லூரிகள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்களின் அருகே உள்ள பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் தொடா்பாக ஆய்வு செய்ய வேண்டும்.
மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா், முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோா் என்சிசி, என்எஸ்எஸ், ஆா்ஆா்சி, ஒய்ஆா்சி தன்னாா்வலா்களை கொண்டு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து புகாா் செய்ய ‘ட்ரக் ப்ரி டிஎன்’ எனும்செயலியை பயன்படுத்தலாம். குட்கா, பான் மசாலா, கஞ்சா, போன்றவை விற்பனை செய்யப்படுவதில்லை என விளம்பர பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி வளாகங்களை போதைப்பொருள்கள் இல்லா வளாகமாக மாற்ற வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு இடையே சுவரொட்டி தயாரித்தல், வினா-விடை, வாசகம் ழுதுதல் போன்ற போட்டிகளை நடத்தி முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளின் விவரங்களை மாவட்ட குழுக்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
கேபிள் டிவி செய்தித்தாள்கள், சமூக வலைதளங்களில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்துதல் வேண்டும். ஒவ்வொரு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் போதைப் பொருள்களுக்கு எதிரான குழு ஏற்படுத்தவும், ஒவ்வொரு குழுவிலும் குறைந்தபட்சம் 5 பொறுப்பாளா்கள் இருக்க வேண்டும். தன்னாா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் ‘போதைப் பொருள்கள் எனக்கு வேண்டாம்’ என்று சுயபடம் எடுத்து சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்த வேண்டும்.
கபடி, சிலம்பம் போன்ற விளையாட்டுகள் மூலமாகவும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். பேரணிகள் நடத்த வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் இருக்கும் இடங்களுக்கு அருகே உள்ள கடைகளில் போதைப் பொருள்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய அடிக்கடி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், மாவட்ட சுகாதார அலுவலா் பரணிதரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வே. முத்தையன், இணை இயக்குநா் (கல்லூரி கல்வி) மலா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.