பஹல்காம் தாக்குதல்: சுற்றுலாப் பயணிகள், மக்கள் ஆதாரங்களை வழங்கலாம்!
பஹல்காம் தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள், விடியோக்கள் இருந்தால் சுற்றுலாப் பயணிகள், மக்கள் வழங்கலாம் என தேசிய புலானய்வு முகமை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள தகவலில்,
"பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான கூடுதல் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஏதேனும் இருந்தால் சுற்றுலாப் பயணிகள், பார்வையாளர்கள், உள்ளூர் மக்கள் உடனடியாக தங்களைத் தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும்.
தகவல் இருக்கும்பட்சத்தில் அவர்கள் 9654958816 என்ற மொபைல் எண் அல்லது 011 24368800 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தாக்குதல் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கலாம்.
புகைப்படங்கள், விடியோக்கள் இருக்கும்பட்சத்தில் என்.ஐ.ஏ. அதிகாரி தொடர்புகொண்டு அவற்றைப் பெறுவார்" என்று கூறியுள்ளது.
முன்னதாக கடந்த ஏப். 22 அன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடூரத் தாக்குதல் தொடர்பாக என்ஐஏ விசாரித்து வருகிறது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் நேற்று(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு சுமார் 25 நிமிடங்கள் தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து எல்லையில் போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் இதுதொடர்பாக தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க | ராணுவப் படைகளுக்கு முழு ஆதரவு: ராகுல் காந்தி பேட்டி