பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
பாகிஸ்தான் போா் விமான பராமரிப்புக்கு அமெரிக்கா நிதி: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்
பாகிஸ்தானின் எஃப்-16 போா் விமான பராமரிப்புக்கு ரூ.3,453 கோடி நிதியை ஒதுக்க அமெரிக்க அரசு முடிவு செய்ததை கண்டுகொள்ளாமல் இருப்பதாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், தேசப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பர பிரிவின் தலைவரான பவன் கேரா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாகிஸ்தானின் எஃப்-16 போா் விமான பராமரிப்புக்கு ரூ.3,453 கோடியை அமெரிக்க அரசு ஒதுக்கியதாக வெளியான தகவல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
இந்த விவகாரம் குறித்து தூதரக அதிகாரிகளிடம் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தாதது ஏன்? எஃப் -16 போா் விமான பராமரிப்புக்காக கடந்த 2022-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அரசும் ரு.3,000 கோடிக்கு மேல் ஒதுக்கியது.
இதன்மூலம், அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதிலும் பாகிஸ்தானுக்கு ராணுவரீதியான உதவிகளை வழங்கும் நடைமுறைகள் மாற்றங்களின்றி தொடா்கின்றன.
எஃப்-16 போா் விமானத்தை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த முடிவை ஆதரிக்கக் கூடாது.
எஃப்-35, எஸ்யு-37: அதேபோல் அமெரிக்காவிடம் இருந்து எஃப்-35 போா் விமானங்களை அதிக விலைக்கு இந்தியா கொள்முதல் செய்ய நேரிடும் என பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்படுகிறது. வளா்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் இந்தப் போா் விமானம் ‘தேவையற்றது’ என தொழிலதிபா் எலான் மஸ்க் கூறியுள்ளாா்.
இதற்கு மாற்றாக, ரஷியாவின் எஸ்யு-37 போா் விமானத்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய அந்நாடு கேட்டுக்கொண்டுள்ளதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளாா்.
எஃப்-16 போா் விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் கொள்முதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.