கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
பார் புகழும் பண்ணாரி மாரியம்மன்
அம்மன் கோயில்களில் பண்ணாரி மாரியம்மன் கோயில் புகழ்பெற்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வனப் பகுதியான இங்கு ஆடுகள், மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாயிகள் அழைத்து வருவர். அதில் ஒரு பசு நாள்தோறும் கூட்டத்தை விட்டு விலகிச் செல்வதை அறிந்த மேய்ப்பவன், பின்தொடர்ந்தான். அந்தப் பசு வேங்கை மரத்தடியில் தாமாகவே பால் சுரந்தது.
இந்த அதிசயத்தை அறிந்த ஊர் மக்கள்அங்குள்ள புற்கள், செடிகளை அகற்றியபோது, சுயம்பு லிங்கத் திருமேனி இருப்பதைக் கண்டனர். அப்போது அங்கிருந்த ஒரு பக்தருக்கு அருள்வந்து, "மக்களுக்கு வழித்துணையாக விளங்குகிறேன். தனி கோயில் எழுப்பி பண்ணாரி அம்மனாக வழிபடுங்கள்' என தகவல் சொன்னது.
கருவறையில் கற்சிலையாய் அம்மன் அமர்ந்த கோலத்தில் வலப் புறமும்,இடப்புறமும் மேலிரு கரங்களும்,கீழிரு கரங்களும் தாங்கி நான்கு கரங்களுடன் எழிலோடு காட்சி தருகிறாள். இடது கீழ்க்கரத்தில் குங்குமக் கிண்ணம், மேல்கரத்தில் சங்கு,வலது கீழ்க்கரத்தில் உடைவாள்,மேல்கரத்தில் உடுக்கையும் தாங்கிய கோலம் பக்தர்களைப் பரவசப்படுத்துகிறது.
கருவறை எதிரில் உள்ள மரம், அன்னை அமர்ந்த மரமாகப் போற்றப்படுகிறது. ஆண்களைக் காக்க வாளையும், பெண்களைக் காத்திட,குங்குமத்தையும் எந்த நேரமும் தன் கரங்களில் தாங்கி நிற்கிறாள் தெற்கு நோக்கிய சுயம்பு அம்மன். புற்று மண் பிரசாதம்.
மூலவரான அம்மன் தெற்கு முகமாக அமைந்துள்ளதால், பிரதான வாயிலும் அவ்வாறே அமைந்துள்ளது. அன்னை அமர்ந்த வேங்கை மரம் தலமரமாகவும், தெப்பக் கிணறு தீர்த்தமாகவும் அமைந்துள்ளன.
தீராத நோய்கள் தீர, உடல் குறைபாடுகள் நீங்க, திருமண வரம் பெற... என பல்வேறு வேண்டுதல்களுக்கு நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் அன்னையை நாடி வந்து பலன் பெற்றுச் செல்கின்றனர். பங்குனி மாதத்தில், பூக்குழி எனப்படும் குண்டம் தீ மிதி திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.சத்தியமங்கலத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில், தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதியில் கோயில் அமைந்துள்ளது.
}பனையபுரம் அதியமான்