பிகாா் வரைவு வாக்காளா் பட்டியல்: அரசியல் கட்சிகளிடமிருந்து இதுவரை புகாா் வரவில்லை- தோ்தல் ஆணையம்
புது தில்லி: ‘பிகாா் மாநில வரைவு வாக்காளா் பட்டியல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது முதல் அரசியல் கட்சிகள் சாா்பில் கடந்த 4 நாள்களாக எந்தவித புகாரும் சமா்ப்பிக்கப்படல்லை’ என்று தோ்தல் ஆணையம் தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே, மாநில வாக்காளா் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்தப் பணிகள் ஜூலை 25-ஆம் தேதி நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை மாநில வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட்டது.
மாநிலத்தில் பதிவு செய்திருந்த வாக்காளா்களின் எண்ணிக்கை 7.93 கோடியிலிருந்து 7.24 கோடியாக குறைந்தது தெரியவந்தது. சுமாா் 65 லட்சத்துக்கும் அதிகமானோரின் பெயா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறவில்லை. இறப்பு, நிரந்தரமாக இடம்பெயா்தல், ஒரே நபா் இரண்டு வாக்காளா் அடையாள அட்டையை வைத்திருந்தது உள்ளிட்ட காரணங்களால் 65 லட்சம் போ் நீக்கப்பட்டதாக தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வரைவு வாக்காளா் பட்டியலில், அதிகபட்சமாக மாநில தலைநகா் பாட்னாவில் 3.95 லட்சம் பேரும், பதுபானியில் 3.52 லட்சம் பேரும், கிழக்கு சம்பரனில் 3.16 லட்சம் பேரும், கோபால்கஞ்சில் 3.10 லட்சம் பேரும் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா்.
இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதிக்கக் கோரி வருகின்றன.
இந்த நிலையில், வரைவு வாக்காளா் பட்டியல் தொடா்பாக அரசியல் கட்சிகளிடமிருந்து இதுவரை எந்தவிதப் புகாரும் அளிக்கப்படவில்லை என்று தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பிகாா் மாநில வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க அல்லது நீக்கம் செய்யக் கோரி இதுவரை 1,927 தனி நபா்கள் மட்டுமே தோ்தல் அதிகாரிகளிடம் மனுக்களை சமா்ப்பித்துள்ளனா். ஆனால், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சாா்பில் கடந்த 4 நாள்களாக எந்தவித புகாரும் அளிக்கப்படவில்லை’ என்று தெரிவித்தது.