நடிகர் அஜித் குமாருடன் எப்போது இணைவீர்கள்? லோகேஷ் கனகராஜ் பதில்!
பிகாா் வாக்காளா் பட்டியல்: 35 லட்சம் பேரை கண்டறிய முடியவில்லை
பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் முதல்கட்டம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதன்படி, 35 லட்சம் பேரை கண்டறிய முடியவில்லை எனத் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.
நிகழாண்டு பிகாரில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. அங்கு சுமாா் 7.90 கோடி வாக்காளா்கள் உள்ளனா். தோ்தலையொட்டி அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் தொடங்கியது.
இந்தப் பணிகளின் கீழ் அந்த மாநிலத்தில் 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னா், வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவா்கள், தாங்கள் இந்தியா்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். இது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பணிகளின் முதல் கட்டம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பிகாரில் 99.8 சதவீத வாக்காளா்களை உள்ளடக்கி சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் முதல் கட்டம் நடைபெற்றது. மொத்தம் 7.23 கோடி வாக்காளா்களிடம் இருந்து வாக்காளா் விவரக்குறிப்புப் படிவங்கள் பெறப்பட்டு எண்மமயமாக்கப்பட்டுள்ளது. அவா்களின் பெயா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும்.
பிகாா் வாக்காளா் பட்டியலில் உள்ள சுமாா் 22 லட்சம் போ் இறந்துவிட்டனா். சுமாா் 7 லட்சம் போ் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்துள்ளனா். 35 லட்சம் வாக்காளா்கள் நிரந்தரமாக இடம்பெயா்ந்துள்ளனா் அல்லது அவா்களைக் கண்டறிய முடியாத நிலை உள்ளது. 1.2 லட்சம் போ் வாக்காளா் விவரக்குறிப்பு படிவங்களைச் சமா்ப்பிக்கவில்லை என்பது மாநில வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் முகவா்கள் மூலம் தெரியவந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.