பீகார்: ஊர்க்காவல் படை தேர்வில் மயக்கமடைந்த பெண்; ஆம்புலன்ஸில் வைத்து கூட்டுப் ப...
சிக்கலில் சின்னசாமி மைதானம்! ஆர்சிபி கூட்ட நெரிசல் பலி விவகாரம்!
பெங்களூருவின் எம்.சின்னசாமி மைதானம் பெரியளவிலான நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்று விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் 11 பேர் பரிதாபமாக பலியான நிலையில், சம்பவத்துக்கு காரணமாக அமைந்த எம்.சின்னசாமி மைதானமானது பாதுகாப்பானது அல்ல என்று விசாரணைக் குழு அறிவித்துள்ளது.
நடப்பு ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (ஆா்சிபி) அணி முதன்முறையாக கோப்பையை வென்றது. இதையொட்டி, பெங்களூரு எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 4ஆம் தேதியில் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மைதானத்தின் வாயில் மற்றும் சுற்றுப்புறத்தில் சுமாா் 3 லட்சம் ரசிகா்கள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட கா்நாடக அரசு, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்தது.
மேலும், இந்த அசம்பாவிதத்தை தடுக்க தவறியதாக பெங்களூரு நகர காவல் ஆணையா் உள்பட காவல்துறை அதிகாரிகள் சிலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
இந்த உயிரிழப்புகளுக்கு ஆர்சிபி அணி, கர்நாடக கிரிக்கெட் கழகம், காவல்துறையினரின் ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என்று விசாரணை ஆணைய அறிக்கையில் தெரிவித்தது.
கூட்டநெரிசல் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு கா்நாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான்மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் தனிநபா் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
கர்நாடக மாநில அரசிடம் டிகுன்ஹா தலைமையிலான விசாரணைக் குழு அளித்த அறிக்கையில், சின்னசாமி மைதானம் பெரியளவிலான நிகழ்வுகள் நடத்த போதிய வசதிகள் இல்லாதது, பொது பாதுகாப்புக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்துகளை ஏற்படுத்துவதாக கூறியதுடன், சின்னசாமி மைதானம் பாதுகாப்பானது அல்ல, தகுதியற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவின் இந்த அறிக்கையை அம்மாநில அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதனிடையே, ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 போட்டியின் தொடக்கம் மற்றும் இறுதிப் போட்டிகளும் சின்னசாமி மைதானத்தில்தான் நடத்தப்படவிருப்பதாக இருந்தது. ஆனால், தற்போது விசாரணைக் குழுவின் அறிக்கையால் ஐசிசி மகளிர் உலகக் கோப்பைப் போட்டிகள் இடமாற்றம் செய்யும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், அடுத்தாண்டு பிரீமியர் லீக் போட்டிகளும் சின்னசாமி மைதானத்தில் நடத்தப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிக்க:உலகளவில் பெரும் மதிப்புடைய தலைவர்கள்! பிரதமர் மோடி முதலிடம்!
M Chinnaswamy Stadium unsuitable for large-scale events after Bengaluru stampede