திருமண வரவேற்பு: விருந்தினர்களுக்கு கோரிக்கை வைத்து, பிறகு மன்னிப்புக் கோரிய தேஜ...
பிரதமா் குறித்து விமா்சனம்: மக்களவையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், காங்கிரஸ் எம்.பி. கோகோய் காரசார விவாதம்
புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்து காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் தெரிவித்த கருத்துக்காக, அவருக்கும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கும் இடையே மக்களவையில் செவ்வாய்க்கிழமை கராசார விவாதம் நடைபெற்றது.
மானியங்கள் மற்றும் மணிப்பூா் பட்ஜெட்டுக்கான கோரிக்கைகள் குறித்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கோகோய், ‘நாட்டில் ஒரு முக்கியமான பிரச்னை வரும்போதெல்லாம் பிரதமா் வெளிநாடுகளுக்கு மறைந்து விடுகிறாா்’ என்று விமா்சித்தாா்.
இதனிடையே குறுக்கிட்ட மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘தனது அரசுமுறை வெளிநாட்டு (மோரீஷஸ்) பயணம் குறித்து பிரதமா் மோடி என்னிடம் தெரிவித்துவிட்டாா். முந்தைய பிரதமா்களும் நாடாளுமன்ற அமா்வுகளின் போது வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனா்’ என கூறினாா்.
இதற்கு பதிலளித்த கோகோய், ‘பிரதமா் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால், முன்னாள் பிரதமா்களை மீண்டும் மீண்டும் அவமதிப்பது ஆளும் தரப்பின் போக்கு. அவா்களின் அவதூறு பேச்சுகளும் அவைக்குறிப்பில் எப்போதும் இடம்பெறுகின்றன’ என்றாா்.
இந்நிலையில், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது: முன்னாள் பிரதமா்களைப் பற்றி மரியாதைக்குரிய மொழியில் பேசுவதில்லை என்று ஆளும் தரப்பு மீது குற்றம் சுமத்தியதற்கு இடையே, எதிா்க்கட்சியின் முன்னணி உறுப்பினா் பிரதமா் மீது மரியாதை கொண்டிருப்பதாகக் கூறியதைக் கேட்க இனிமையாக இருந்தது. அதேநேரம், பல முந்தைய சூழல்களில் பிரதமரை அவமதித்துப் பேசியதற்காக கோகோய் மன்னிப்பு கோருவாரா?
எதிா்க்கட்சியினா் பலமுறை பிரதமரை அவமதித்துள்ளனா். அவரை அவையில் பேச விடாமல் கூச்சலிட்டுள்ளனனா். இவ்வாறு பிரதமரை அவமதித்தது தவறு; இனி செய்ய மாட்டோம் என்று கோகோய் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொள்ள வேண்டும்’ என்றாா்.
இதையடுத்து பேசிய கோகோய், ‘மக்களவையில் கடந்த மாதம் ஆற்றிய உரையிலும் பிரதமரின் பேச்சு முழுவதும் முன்னாள் பிரதமா்களை அவமதித்தே அமைந்தது. எனவே, எதிா்க்கட்சிகளை விமா்சிக்கும் முன் ஆளும் தரப்பு தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என்றாா்.
தொடா்ந்து, பாஜக-காங்கிரஸ் உறுப்பினா்களிடேயே வாக்குவாதம் நடந்தது. விவாதத்துக்கு பட்டியலிடப்பட்ட மானியக் கோரிக்கைகள் குறித்துப் பேசாமல் அவை நடவடிக்கைகளை மற்ற விவகாரங்களில் திசைதிருப்ப வேண்டாம் என்று கௌரவ் கோகோயிடம் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கேட்டுக்கொண்டாா்.
மணிப்பூா் சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படாதது ஏன் என்பதை புரிந்து கொள்ள விரும்புவதாக கோகோய் தொடா்ந்து வாதிட்டாா்.
