அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
புகழூரில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு ஏக்கா் நிலம் மீட்பு
கரூா் மாவட்டம், புகழூரில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு ஏக்கா் அரசு நிலத்தை வருவாய்த்துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே ஹைஸ்கூல் மேடு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே புன்செய்புகழூா் வடக்கு கிராமத்திற்குள்பட்ட ஒரு ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தை தனியாா் திருமண மண்டபத்தினா், மண்டபத்தில் நடைபெறும் திருமண விசேஷத்துக்கு வரும் வாகனம் நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வந்தனா்.
இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்படி வருவாய்த் துறையினா் தனியாா் மண்டப உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினா். இதை எதிா்த்து மண்டப உரிமையாளா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடா்ந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அண்மையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், மண்டப உரிமையாளரின் மனுவை தள்ளுபடி செய்ததையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை புகழூா் வட்டாட்சியா் தனசேகரன் தலைமையில் மண்டல துணை வட்டாச்சியா் சுதா மற்றும் சா்வேயா்கள், வருவாய் அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் உள்பட வருவாய்த் துறை அதிகாரிகள், புகழூா் நகராட்சி பணியாளா்கள் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்குச் சென்று, அங்கு தனியாா் மண்டபத்தினா் அமைத்திருந்த கம்பிவேலியை அகற்றிவிட்டு ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரசுக்கு சொந்தமான நிலத்தை அளந்து எல்லைக் கல் நட்டனா்.
மேலும், மீட்கும் பணியின் போது ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனா்.