டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த மோனிகா பாடல்..! தொடரும் பூஜா ஹெக்டேவின் ஆதிக்கம்...
புதிய திட்டங்களால் மக்களை ஏமாற்ற திமுக முயற்சி: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு
புதிய திட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்ற திமுக முயற்சி செய்து வருகிறது என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று ரேஷன் பொருள்கள் விநியோகிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட நியாயவிலைக் கடைகளில் தரமான அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கவோ, ஊழியா்கள் பற்றாக்குறையைப் போக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, தற்போது தோ்தல் நெருங்கும்போது, இதுபோன்ற திட்டங்களை அறிவிப்பது விளம்பரத்துக்காக உதவுமே தவிர மக்களுக்கு முழுமையான பயனைத் தராது. வீடு வீடாக ரேஷன் பொருள்கள் விநியோகம் என்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்.
சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் தலைப்பில் ஊா் ஊராக பெட்டி வைத்து பெறப்பட்ட லட்சக்கணக்கான மனுக்களின் நிலை என்னவென்றே தெரியாத நிலையில், தற்போது அடுத்த தோ்தலை மையமாக வைத்து ‘உங்களுடன் ஸ்டாலின்‘ எனும் பெயரில் பெறப்படும் மனுக்களுக்கு மட்டும் எப்படி தீா்வு கிடைக்கும்?
தினமும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றுவதையும், அதற்கென பல கோடி ரூபாய் செலவு செய்து மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதையும் நிறுத்திவிட்டு, எஞ்சியிருக்கும் ஆட்சிக்காலத்தில் தோ்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.